மதுரை கோட்டத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வருகிற 30-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06651) மதுரையில் இருந்து தினமும் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ராமேஸ்வரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06656) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு இரவு 9.55 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில்கள் கீழ்மதுரை, சிலைமான்,திருப்புவனம், திருப்பாசேத்தி, ராஜகம்பீரம், மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், வாலாந்தரவை, மண்டபம் கேம்ப், மண்டபம், பாம்பன் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 12 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
திருச்செந்தூரில் இருந்து ஒரு ரெயில் நெல்லைக்கு வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06674) திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து இந்த ரெயில் (வ.எண்.06677) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருச்செந்தூர் ரெயில் நிலையம் வந்தடைகிறது.
இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகனேரி, குரும்பூர், கச்சனாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளைங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில், 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
நெல்லையில் இருந்து வருகிற 30-ந் தேதி முதல் செங்கோட்டைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06657) நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து வருகிற 31-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06682) செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு காலை 8.50 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மாதேவி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
கொரோனா நோய்ப்பரவல் கட்டுப்பாடு என்ற பெயரில் தமிழகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டன. அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன. பாசஞ்சர் ரெயில்கள் மற்றும் இணைப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ரெயில்வே துறை பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது.பின்னர் கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து பாசஞ்சர் ரெயில்களை தவிர பிற ரெயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அனைத்து பாசஞ்சர் ரெயில்களும் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. அதாவது, மறைமுக கட்டண உயர்வுடன் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றை பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். மதுரை கோட்டத்தில் பாசஞ்சர் ரயில்களே இல்லாமல் போய்விட்டது.ரயில்களில் கொள்ளை கட்டணம் வசூலிப்பதால் பெண்கள் குறைந்த தூரம் செல்ல அரசு பஸ்ஸில் இலவசமாக பயணித்து செல்கின்றனர். மதுரை கோட்டத்தில் இயக்கிய பாசஞ்சர் ரயில்களை மீண்டும் தொடர்ந்து பாசஞ்சர் ரயில்களாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.ரயில் சேவை என்பது எழை நடுத்தர அதிக வருவாய் ஈட்டுவோர் என அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் இயக்கவேண்டும்.பத்துரூபாய் கொடுத்து ரயில்பயணம் செய்ய வசதி இல்லாத பலர் இப்போதும் அதிகம் இருக்கும் சூழலில் இவர்களிடம் இருமடங்கு ரயில் கட்டணம் எக்ஸ்பிரஸ் என பெயரைமாற்றி வசூலிப்பது பகல்மோசடியாகும்.பாசஞ்சர் ரயில்கள் நிற்கும் இடங்களில் நிறுத்தி இதே பயணநேரத்தில் இயங்கி பெயரை மட்டும் எக்ஸ்பிரஸ் என மாற்றி கொள்ளை கட்டணம் வசூலிப்பதில் என்ன நியாயம் என பயணிகள் கேட்கும் சூழலை தெற்கு ரயில்வே ஏற்படுத்தி வருகிறது.





