கோவா மாநிலத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள் அங்கு ‘ஐ லவ் யூ’ என எழுதிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில், வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் புகுந்து 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
அதோடு பெரும் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் டி.வி திரைவில் ‘ஐ லவ் யூ’ என்றும் எழுதிவிட்டுச் சென்றுள்ளதால், வீட்டின் உரிமையாளரும் போலீசாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவா மாநிலம் மார்கோவ் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிப் செக். இவர் வேலை காரணமாக இரண்டு நாட்கள் வெளியூருக்குச் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் தனது வீட்டுக்குத் திருப்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிப், வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.
வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
மேலும், ஒன்றரை லட்ச ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மார்கோவ் நகர் போலிஸாருக்கு ஆசிப் தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து ஆய்வு செய்தனர்.
கொள்ளை நடந்த வீட்டில் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று போலீசார் தேடியபோது, வீட்டில் இருந்த தொலைக்காட்சியின் திரையில், அழிக்க முடியாத மார்க்கர் பேனாவால் ‘I LOVE YOU’ என கொள்ளையர்கள் எழுதிச் சென்றிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே இடத்தில் பெரும் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் கொள்ளையர்கள் ‘ஐ லவ் யூ’ என்றும் எழுதிவிட்டுச் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
விரும்புவதாகத் தெரிவித்துள்ளதால் மீண்டும் கொள்ளையர்கள் திருட வந்துவிடுவார்களோ என்றும் வீட்டின் உரிமையாளர் அச்சமடைந்துள்ளாராம்.