அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி அதிமுகவை விமர்சித்ததை சுட்டிக் காட்டி செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது ,
அதிமுகவை பாஜக விமர்சித்தால் நிச்சயம் பதிலடி கொடுப்போம். மத்திய அரசிடம் பதவி பெற அண்ணாமலை அரசியல் செய்கிறார். ஏற்கனவே பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை.எல்.முருகன் ஆகியோர் பதவி பெற்றத்தை போல், அண்ணாமலையும் பதவி பெற நினைக்கிறார்.நாகூர் தர்காவில் காலையில் அதிகளவு புறாக்கள் இருக்கும். மாலையில் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும். அதேபோன்ற புறாக்கள் தான் இங்கு உள்ளது. கூட்டத்தை வைத்து எதையும் கூற முடியாது.
அண்ணாமலையின் செயல்பாடுகள் மத்திய அரசு பதவியை குறிவைத்ததைப் போல் தான் உள்ளது. அதிமுகதான் தற்போது எதிர்க்கட்சி. ஆயிரம் கிளைகளைக் கொண்டு செயல்படும் கட்சி அதிமுக. 10 ஆயிரம் பேரை திரட்டிவிட்டார்கள் என்பதை வைத்து எதிர்க்கட்சி என கூற முடியாது. பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம். அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம்.பிற கட்சிகள் தயார் என்றால் அதிமுகவும் தனித்து போட்டியிட தயாராக உள்ளது. யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்ல ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தயார். நாளைக்கே தேர்தல் வைத்துக் கொள்ளலாம்.எல்லா கட்சியும் தனித்தே போட்டி இடுவோம்,என்றார்.




