தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலை களுக்கான மின்கட்டணம் உயருகிறது. அதே நேரம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின்கட்டண உயர்வுக்கு வழக்கம்போல் மத்திய அரசு மீது பழியை சுமத்தி திருப்பதி பட்டுக்கொண்டு மாநில அரசு.
தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது வீட்டு பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 85 பைசா வரையிலும், வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.72 வரையிலும் அதிகரித்தது. மீண்டும் உயருகிறது அதன்பின்னர் 8 ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது மின்சார வாரியத்தின் நிதி நிலைமையை காரணம் காட்டி மின்சார கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர் மத்தியில் அவர் கூறியதாவது:-
100 யூனிட் வரை இலவச மின்சாரம் தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதியின் படி நிலை கட்டணம் 2 மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவார்கள், தற்போது குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். எவ்வளவு உயர்த்தப்படும்? 2 மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.27.50-ம், 300 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.72.50-ம், 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.147.50-ம், 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.297.50-ம், 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) ரூ.155-ம் மட்டுமே கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.275-ம், மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.395-ம், 900 யூனிட்டுகள் வரை நுகர்வு செய்யும் 84 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதத்துக்கு ரூ.565-ம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒரே மின் கட்டணம் தற்போது வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மின் நுகர்வு 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும்போது அதற்கான மின் கட்டண தொகையானது 58.10 சதவீதம் அதிகரித்து மொத்தம் ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின் நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஊரகம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இயங்கி வரும் நூலகங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.5.75 ஆகவும், நிலை கட்டணமாக மாதத்துக்கு ரூ.60 ஆகவும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின் கட்டணத்தை மானியம் இல்லா வீட்டு விகிதப்பட்டியலில் கணக்கீடு அதாவது 30 சதவீதம் குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 93 சதவீதம் (2.26 லட்சம்) சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு, குறைந்த அளவாக யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 53 சதவீதம் (19.28 லட்சம்) வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு… தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு சிறிய தொகையாக ரூ.1 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல், யூனிட் ஒன்றுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு குறைந்த அளவில், யூனிட் ஒன்றுக்கு ரூ.1.15 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில், யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 65 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உயரழுத்த வணிகப் பிரிவு நுகர்வோர்களுக்கான, மின் கட்டணமானது யூனிட் ஒன்றுக்கு குறைந்த அளவாக 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தாமாக விட்டுக்கொடுக்கும் திட்டம் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்துக்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் ”மின் மானியத்தை தாமாக விட்டுக்கொடுக்கும்” திட்டம் மூலம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வீட்டு நுகர்வோர்கள் தங்கள் மின் வாகனத்தை தங்கள் வீட்டிலேயே அதே விகித பட்டியலில் மின்னேற்றம் செய்து கொள்வதற்கும், அதேபோல், வணிக நுகர்வோர்கள் அதே விகித பட்டியலில் பொது மின்னேற்றம் செய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் (நிதி) சுந்தரவதனம் ஆகியோர் உடனிருந்தனர்.





