பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியில் திருமண வீட்டிற்கு சென்று படகில் திரும்பியவர்கள் ஆற்றில் மூழ்கி 19 பேர் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண எல்லையில் உள்ள இண்டஸ் ஆற்றில் பயணித்தபோது அந்தப் படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த படகு விபத்தில் 19 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ள பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. விசாரணையில், அதிக அளவிலான மக்களை படகில் ஏற்றியது, நீரின் ஓட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.

திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




