

புதுச்சேரி கோயம்புத்தூர் பகுதியில் மாணவர்களுக்கு போதை சாக்லேட் கஞ்சா விற்பனை செய்தவர்கள் போலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைதுசெய்து வருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஐந்து வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை தாகூர் கலை கல்லுாரி அருகே மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக, லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு அப்பகுதிக்கு சென்றனர். போலீசாரைப் பார்த்ததும், அங்கு நின்றிருந்த 5 பேர் திடீரென தப்ப முயன்றனர்.போலீசார், அவர்களை பிடித்து சோதனை செய்த போது, கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
சிறு, சிறு பொட்டலங்களாக 104 கிராம் கஞ்சா வைத்திருந்தனர்.விசாரணையில், அவர்கள் பெரிய கோட்டக்குப்பம் சக்திவேல்,20, முருகேசன்,20, வாழைக்குளம் பகுதியை சேர்ந்த அரவிந்த்,26, வில்லியனுார், காவேரி நகரை சேர்ந்த கோகுல்நாத்,26, எல்லைபிள்ளைசாவடியை சேர்ந்த அருண்,29, என தெரிய வந்தது.
இவர்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதை ஒப்புக் கொண்டனர்.அதையடுத்து, 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.கைதான கோகுல்நாத், அருண் மீது கொலை முயற்சி உட்பட இரு வழக்குகள் இதே போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் போதை கஞ்சா சாக்லேட் களை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்த ராஜஸ்தான் வாலிபர் ஒருவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்புடைய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில், கஞ்சா பயன்பாடு இருப்பதாகவும், கஞ்சாவை சாக்லேட் வடிவத்தில் விற்பனை செய்வதாகவும், போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையிலான தனிப்படை போலீசார், தெப்பக்குளம் அருகே பைக்கில் சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கேத்தன் குமார், 30 என்பதும், கோவையில் டீக்கடையில் பணிபுரிந்து, சில பள்ளி, கல்லுாரிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதும் தெரியவந்தது.
அவர் பதுக்கி வைத்திருந்த, 35 கிலோ கஞ்சா சாக்லேட் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்; மதிப்பு 13 ஆயிரம் ரூபாய்.தவிர, தடை செய்யப்பட்ட 140 கிலோ குட்கா, பான் மசாலா ஆகியவையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன; மதிப்பு 2.94 லட்சம் ரூபாய். அவர் பயன்படுத்தி வந்த பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் கூறுகையில், ‘கஞ்சாவை, சாக்லேட் போல மாற்றி, அதன் மீது வழக்கமான மிட்டாய் கவர் சுற்றி விடுகின்றனர். வெளிப்பார்வைக்கு மிட்டாய் போலவே தெரியும். சுவைத்துப் பார்த்தால் தான் கஞ்சா சாக்லேட் என்பதை கண்டுபிடிக்க முடியும். பிற மாவட்டங்கள், மாநிலங்களிலும் இவர்களது நெட்வொர்க் இருக்க வாய்ப்புள்ளது’ என்றனர். இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.




