சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்களை விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆணையம் தேவை என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவிடம் பாமக மனு கொடுத்துள்ளது. பாமக நிறுவுனர் ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அவரை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில்…. கிரானைட் கொள்ளை தொடர்பாக மதுரையில் விசாரணை நடத்தி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு அரசு நிர்வாகம் ஆதரவளிக்க மறுக்கிறது. கிரானைட் கொள்ளை ஊழலில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் கடந்த 9 மாதங்களில் 4.45 டன் எடையுள்ள தாதுக்களை ஏற்றுமதி செய்துள்ளது இதனால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆற்று மணல் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ரூ.188 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மின்வெட்டால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம் ஆகியவை குறைந்துள்ளன. இதற்கு மின்துறையில் உள்ள ஊழலே காரணம். மின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் ரூ. 4,510 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமான மற்றும் கட்டட அனுமதி வழங்குவதில் ஊழல், பருப்பு கொள்முதலில் ஊழல், ஆவின் பால் ஊழல், அரசுத்துறை ஒப்பந்தங்களில் ஊழல் என ஏராளமான ஊழல்கள் உள்ளன. இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவரது பதில் திருப்தி அளிக்காவிட்டால், அது தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.
- என்று கோரப்பட்டுள்ளது.


