
குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை டெல்லியில் நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு செவ்வாய் கிழமை இரவு சென்றடைந்தார். டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் ஓய்வெடுத்த முதல்வர் ஸ்டாலின், இன்று காலை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தார்.
இதையடுத்து, குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழகம் சாா்பிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவுள்ளார்.





