
குஜராத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 5 மணி வரை 58 சதவீத வாக்குப்பதிவானதாக கூறப்படுகிறது.சரியான இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த முழு விவரத்தை தேர்தல் ஆணையம் இரவு அறிவிக்கும்.
குஜராத் மாநிலத்தில் இன்று 93 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது அகமதாபாத்: பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி தேர்தல் நடந்தது.
இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளில் இன்று தேர்தல் நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. நேரம் செல்லச்செல்ல விறுவிறுப்படைந்தது. காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 19.17 ஆக இருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாலை 3 மணி நிலவரப்படி 50.51 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதிகட்சமாக சபர்கந்தா மாவட்டத்தில் 57.24% வாக்குகள் பதிவாகியிருந்தன. 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 58.38 சதவீதமாக உயர்ந்தது. 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
எனவே, இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த முழு விவரத்தை தேர்தல் ஆணையம் இரவு அறிவிக்கும். வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில் காந்திநகர் அருகே ரேசன் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு, பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வருகை தந்தார்.
பிற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் தமது வாக்கை அவர் பதிவு செய்தார். முன்னதாக அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். நேற்று பிரதமர், தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.
