
பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக கடுமையான கொள்கையை அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தி அதனை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில், பீகாரில் விஷ சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்தார்கள். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து உள்ளது. இவற்றில் சரண் மாவட்டத்தில் அதிக அளவாக 74 பேர் உயிரிழந்துள்ளனர். சிவான் மாவட்டத்தில் 5 பேரும், பெகுசராய் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விஷ சாராய உயிரிழப்பு தொடர்ந்து பீகாரின் பல பகுதிகளுக்கும் பரவி வருகிறது. 25 பேருக்கு பார்வை பறிபோயுள்ளது. 30 பேர் வரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதனால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அச்சம் தெரிவிக்கின்றார்கள்.
இதனைத் தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களைப் பற்றி விசாரணை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிக அளவில் பலர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. விரிவான அறிக்கையை அளிக்கும்படி அரசையும் கேட்டுக் கொண்டுள்ளது.
போலீசாரின் எப்.ஐ.ஆர். பதிவு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டால் அது பற்றிய தகவல்களை அளிக்கும் படியும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.