
இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கூடிய சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க மறுத்து சட்டத்தை ரத்து செய்து விட்டது.
இதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக கொண்டு வரும் வகையில் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். இந்த குழு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.
இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். அதன்பிறகு இதை நிரந்தர சட்டமாக்க 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆனால் கவர்னர் இந்த மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்காமல் முதலில் சில விளக்கங்கள் கேட்டார். அந்த விளக்கங்களுக்கு உரிய பதிலை தமிழக அரசு தெரிவித்த பிறகும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் அதை திருப்பி அனுப்பி வைத்தார்.
இதனால் கடந்த மாதம் 9-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு மார்ச் 23-ந்தேதி சட்டசபையிலும் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து இதை மீறி யாரேனும் ரம்மி, போக்கர் விளையாடினால் அவர்களுக்கு தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.