பழங்கால நீர்த் தொட்டியில் தமிழ் கல்வெட்டு..

Published:

977384 - 2026
எட்டக்காபட்டியில் பழங்கால நீர்த் தொட்டியில் தமிழ்க் கல்வெட்டு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வெம்பக்கோட்டை எட்டக்காபட்டியில் பழங்கால நீர்த் தொட்டியில் தமிழ்க் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எட்டக்காபட்டி பேருந்து நிறுத்தத்தின் அருகில் பழமையான கிணறு ஒன்று உள்ளது. அதன் வெளிப்பகுதியில் கல்தொட்டி ஒன்றும் உள்ளது. இந்தக் கல்தொட்டியில் பழங்கால தமிழ் கல்வெட்டு இருப்பது தெரிய வந்தது.

இதை ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான போ.கந்தசாமி ஆய்வு செய்து படிஎடுத்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,

இக்கல் தொட்டியின் இடது புறத்தில் நான்கு வரிகளில் தமிழில் கல்வெட்டு எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது.அதில், கல்வெட்டில் பார்த்தீப வருடம் பங்குனி மாதத்தில் சின்னச் சங்கர வன்னியன் என்பவன் பொது மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக கிணறு மூலம் நீர் இறைத்து சேகரிக்க கல்தொட்டி ஒன்று அமைத்துக் கொடுத்ததாக கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது.
இக்கல்வெட்டின் தமிழ் எழுத்தமைதியைக் கொண்டு 17-ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

250 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் மக்கள் பெரும்பான்மையாக வசித்துள்ளனர். ஊர் மக்கள் பயன்பாட்டுக்காக கிணற்றிலிருந்து நீர் இறைத்து வெளியில் அமைந்துள்ள தொட்டியில் நீரைச் சேகரித்து மக்களுக்கு குடிநீர் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.பல ஆண்டுளாக புனிதமாக கருதப்பட்டு செருப்பு அணிந்து செல்லக் கூடாது என்றும் பெண்கள் தீட்டுத் காலங்களில் அருகில் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு தற்போதும் கடைபிடிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு கல்வெட்டு எழுத்துகளை ஆய்வு செய்து மீண்டும் அவ்விடத்துக்குச் சென்றபோது அந்தப் பகுதி முழுவதும் வெள்ளை, காவி நிற வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.

வரலாற்றைக் கூறும் கல்வெட்டுகள் மக்கள் பலரின் அறியாமையால் கல்வெட்டின் மீது பெயின்ட் அடிக்கக்கூடிய வழக்கம் இன்றும் பல்வேறு கோயில்களில் காணப்படுகின்றன.  இதுபோன்ற பாரம்பரியச் சின்னங்களை அழியாமல் பாதுகாக்க உறுதிமொழி மேற்கொள்ள வேண்டும். என அவர் கூறியுள்ளார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img