கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு தகவல் இது. படத்துடன் பலராலும் பகிரப்பட்ட இந்த தகவலில் தமிழக அரசு மட்டும் ஏன் இப்படி ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக இருக்கிறது என்று கேள்வி கேட்டு பகிரப்பட்டது.
தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ரேஷன் கடைகளில் பயனாளர்கள் பெறும் பொருள்களுக்கு முறையான ரசீதுகள் வழங்கப்படுகின்றன. அதில், இலவச அரிசியில் மத்திய அரசின் பங்கு, மாநில அரசின் பங்கு, ஒவ்வொருவருக்கும் மத்திய அரசின் சார்பில் மானியம் எவ்வளவு வழங்கப்படுகிறது ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் எந்த ரசீதும் வழங்கப்படுவதில்லை. இலவச அரிசியில் மத்திய அரசின் பங்கை மறைத்துவிட்டு, தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, ஏதோ தாங்களே இலவச அரிசி வழங்குவதாக மக்களிடம் நல்ல பெயரை வாங்க முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டை பலரும் முன்வைத்தனர்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் பொது வினியோக திட்டத்தில், மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (திட்டம்) உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், ஒவ்வொருவருக்கும் கூடுதல் அரிசியும், கோதுமையும் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு திட்டத்தில் மானிய விலையில் சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், அண்மையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு ரசீதுகளில் தனியே குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டது. இதன்படி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ரேஷன் கடைகளில் ரசீது வழங்கப்படுகிறது. அந்த ரசீதுகளில், மொத்தம் எவ்வளவு அரிசி வழங்கப்படுகிறது. அதில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு, இதற்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை எவ்வளவு, மாநில அரசின் பங்கு மற்றும் மானியம் எவ்வளவு ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை, அதாவது இலவசம் என்பதை அந்த ரசீதுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு தெலங்கானா மாநிலத்தில் ரேஷன் கடை ஒன்றில் வழங்கப்பட்ட ரசீது ஒன்று இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டு, சமூகத் தளங்களில் வைரலானது. அந்த ரசீதில்,
பயனாளிகளுக்கு 24 கிலோ ரேசன் அரிசி மொத்தம் வழங்கப்படுகிறது. அதில் மத்திய அரசின் பங்கு 20 கிலோ, அதற்கு ஒரு கிலோவுக்கு மத்திய அரசுக்கு ஆகும் செலவு ரூ.36.7 , ஒவ்வொரு பயனாளிக்கும் மத்திய அரசு வழங்கும் மொத்த மானியத் தொகை ரூ.734 என்றும், மாநில அரசின் பங்கு 4 கிலோ, மாநில அரசுக்கு ஆகும் செலவு ரூ.39.18, மாநில அரசு வழங்கும் மானியம் ரூ.156.72 என்றும் தெளிவாக அடுத்தடுத்துக் குறிப்பிட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தான், தமிழகத்திலும் ரசீது வழங்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்ந்துள்ளதால் மத்திய அரசின் உத்தரவு அப்படித்தான் உள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இப்படி எல்லாம் ரசீது கொடுக்கப் படுவதில்லை. எல்லாம் வெறும் துண்டுச்சீட்டுதான். பேனாவிலும் பென்சிலிலும் கிறுக்கிக் கொடுக்கப்படுவதுதான்! ரேஷன் கடை பணியாளர், ஒரு துண்டுச் சீட்டில் என்ன பொருள்கள் உள்ளதோ, அல்லது பயனாளர் என்ன கேட்கிறாரோ அதை பேனாவால் எழுதி, எடை போடுபவரிடம் கொடுக்க, அவரும் அதன்படி பொருட்களைக் கொடுத்தனுப்பி, அந்தத் துண்டுச்சீட்டை கிழித்துப் போட்டு விடுகிறார்.
பயனாளிகள் வாங்கிய பொருள்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு குறுஞ்செய்தி வரும். அதில் என்னென்ன பொருட்கள், எவ்வளவுக்கு வாங்கப்பட்டது போன்ற விவரங்கள் மட்டுமே இருக்கும். இது போல் மானிய விவரங்கள் எதுவும் இருக்காது. ஸ்மார்ட் போன் மூலம் TNEPDS ஆப்பினைத் திறந்து தகவல்களைப் பார்ப்பவர்கள் மேற்கண்ட விவரங்களைத் தான் தெரிந்து கொள்ள முடியுமே தவிர மானிய விவரங்கள் அதிலும் இடம் பெறாது.
ரேஷன் கடைகளில் எந்த ரசீதும் வழங்கப்படுவதில்லை என்பதால், பயனாளர்கள் தங்களுக்கு மத்திய அரசு எவ்வளவு அரிசி வழங்குகிறது, மானியம் எவ்வளவு கொடுக்கிறது என்பது தெரிவதில்லை. எல்லாவற்றிலும் ஸ்டிக்கர் ஒட்டும் மாநில அரசு, இதிலும் மறைமுகமாக மத்திய அரசின் பங்கை மறைத்து, தங்கள் பெயரை மக்களிடம் சேர்த்துக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டினை பொதுவெளியில் பலரும் முன்வைத்துள்ளனர். எனவே, நேர்மையான அரசாக இருந்தால், இதை எல்லாம் பொதுவெளியில் தெரியப்படுத்தி, நேர்மையான முறையில் ரசீதுகளை வழங்கி, நேர்மையான நிர்வாகத்தை அளித்திருக்கும் என்றும் கருத்துகள் பரவலாக உலாவருகின்றன.