ஒரே நாளில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய அதிமுக.,வினர்! இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

Published:

aiadmk in madurai sweet - 2026

அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததற்கும், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கு கொள்ள எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும் சேர்த்து வைத்து அதிமுக.,வினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

அதிமுக.,வில் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த போது அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அதிமுக., பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் கூட்டப்பட்டது.

இந்தப் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக.,வில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று முறையிட்டார்.

ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையும் பொதுக்குழு அங்கீகரித்தது. இதையடுத்து அதிமுக., பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட சட்ட விதிகள் திருத்தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆவணங்களை சமர்ப்பித்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் உடனே எந்த முடிவும் எடுக்காமல் அதை கிடப்பில் போட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

அப்போது தேர்தல் ஆணையத்தில் அதிமுக., தொடர்பான ஆவணங்களை சமர்பித்துள்ளதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் இதில் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதால் விரைந்து முடிவெடுக்க உத்தரவு விடுமாறும் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடர்ந்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் மனு மீது தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்து அதிமுக., பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில் தில்லி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த போதே அதிமுக., பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. நீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக., பொதுக்குழு அறிவித்தது செல்லும் என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல் செய்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் இப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜக., தீவிரமாக உள்ளது. இதனால் தில்லியில் வருகிற 18ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுக.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் குமாரம் பிரிவில் ஒன்றிய கழகப் பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், அதிமுக.,வினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Related articles

Recent articles

spot_img