
மது குடிப்பவர்கள் வசதிக்காக காலையிலேயே மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை அடுத்து தனது பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், காலையில் மது குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக்கூடாது அவர்கள் கடும் உழைப்பாளிகள் என்ற ரீதியில் ஆக்ரோஷமாக குறிப்பிட்டார் அமைச்சர் முத்துசாமி.
ஆனால் குடித்துவிட்டு இது போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஏதாவது அசம்பாவிதத்தில் சிக்கினால் அவர்களுக்கு இழப்பீடு கூட கிடைக்காது என்ற கருத்தை வெளிப்படுத்தி முத்துசாமியை மீண்டும் காய்த்து எடுக்கிறார்கள் சமூக தளத்தில்.
பொது சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு முழுக்க முழுக்க நவீன இயந்திரங்களை பயன்படுத்தாமல் இன்னமும் மனிதர்களை பயன்படுத்துகிறோமே என்று அமைச்சர் முத்துசாமி வருத்தப்பட வேண்டும்! பணியின் போது மது அருந்தி இருந்தால் இழப்பீடு கிடைக்காது என்ற சாதாரண விஷயம் கூட உங்களுக்கு தெரியாமல் போனது எப்படி? என்ற கேள்வியை பலரும் எழுப்புவதை காண முடிந்தது.
இதை முன்னிறுத்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் ஒரு கருத்து…
காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் திரு. முத்துசாமி அவர்கள் ஊடகங்களில் கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுகிறேன். தூய்மைப் பணியாளர்கள், கைகளால் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற, மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அதற்கான தீர்வு காலையில் மது விற்பது அல்ல.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாள், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 425, தமிழகத்தில், தூய்மைப் பணியாளர்கள், கைகளால் கழிவுகள் அகற்றுவதைத் தடை செய்துள்ளதாகக் கூறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் மட்டும் பணியின்போது 56 தூய்மைப் பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர். ஆனால் அமைச்சரோ, கைகளால் கழிவுகள் அகற்றும் பணியில், மது அருந்திவிட்டு ஈடுபடச் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
தூய்மைப் பணியாளர்கள் புனர்வாழ்வுக்கு, மத்திய அரசு, குடும்பத்தில் ஒரு தூய்மைப் பணியாளருக்கு ரூபாய் 40,000, தூய்மைப் பணியாளர் குடும்பத்தினர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு, இரண்டு வருடங்களுக்கு, மாதம் ரூபாய் 3000, தூய்மைப் பணி தொடர்பான சுயதொழில் தொடங்க ரூபாய் ஐந்து லட்சம் வரை மானியம், மருத்துவக் காப்பீடு, தூய்மைப் பணியாளர் மரணங்களைத் தடுக்க, நமஸ்தே திட்டம் என பல திட்டங்கள் தீட்டி, ஆண்டுதோறும் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது.
இந்தத் திட்டங்களை இது வரை பயன்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசு, சாராய விற்பனையைப் பெருக்குவதில் கவனத்தைச் செலுத்தாமல், மத்திய அரசின் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத் திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.