சென்னை: இயக்குனர் பாலசந்தர் இல்லாமலும் ரஜினி உருவாகியிருப்பார். ஆனால் நான் உருவாகியிருக்க மாட்டேன் என்று உத்தமவில்லன் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் பேசினார். ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல்’, “திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ள படம் “உத்தம வில்லன்.’ ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமலஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் நடிகர் நாசர், நடிகைகள் கவுதமி, ஊர்வசி, டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், லிங்குசாமி, விக்ரமன், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன்… “ரஜினியையும், என்னையும் பாலச்சந்தர்தான் கண்டுபிடித்தார் என்று கூறி வருகிறார்கள். பாலச்சந்தர் இல்லாவிட்டாலும் கூட ரஜினி முரட்டுக்காளை போன்ற, வேறு ஏதாவது ஒரு படத்தின் மூலம் நடிகனாகி இருப்பார். ஆனால் பாலச்சந்தர் இல்லாமல் நான் உருவாகி இருக்க மாட்டேன். பாலச்சந்தர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றை இந்த மேடையில் ஒலி பரப்பினார்கள். அதைக் கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். எனக்கும் பாலச்சந்தருக்குமான பாசப்பிணைப்பு நெடுங்காலமாகத் தொடர்கிறது. இயக்குநர் பாலசந்தரால் என்னைப் போல் நிறைய பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் அவர் குருவாக இல்லாமல், மகா குருவாக இருந்திருக்கிறார். உத்தம வில்லன் படத்தில் பாலச்சந்தர் நடிக்க ஒப்புக் கொண்டது எனக்குக் கிடைத்த பெரிய பெருமை. இந்தப் பாடல் வெளியீட்டு விழா மேடையில் அவர் இருப்பார் என்றுதான் அப்போது நான் கருதியிருந்தேன். அவர் இருக்க மாட்டார் என்று முன்பே தெரிந்திருந்தால் இன்னும் பல சிறப்புகளை அவருக்குச் செய்திருப்பேன். பாலச்சந்தர் என்ற மாமனிதரின் நிழலாக நான் இருப்பேன். அவர் பணிகளை தொடர்ந்து செய்வேன். காலமெல்லாம் அவருக்கு நன்றி உள்ளவனாகவும் இருப்பேன். என்று கூறினார். [su_youtube url=”https://www.youtube.com/watch?v=6h94KRvPsYE”]
பாலசந்தர் இல்லாமலும் ரஜினி உருவாகியிருப்பார்; ஆனால் நான்? : ‘உத்தமவில்லன்’ கமல்ஹாசன்
Published:

