தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார். மதுரையில் செய்தியாளரிடம் அவர் கூறியது:
காமராஜர் மீது பொய்ப் புகார்களைக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்தான் திமுக.,வினர்! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு. எங்கு பார்த்தாலும் லஞ்சம். மக்கள் பிரச்சனையை தீர்க்க ஆர்வம் காட்டவில்லை. இவை போன்றவை அன்றாட நிகழ்வாகும்.
தவறுகள் செய்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வருமான வரி துணையின் கடமையாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக., அமைச்சர்கள் சொல்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு அவ்வப்போது நாங்கள் பதில் அளித்து வருகிறோம்.
திமுகவில் பல கோழைகள் அமைச்சராக உள்ளனர்.
அதற்கு உதாரணம் அமைச்சர் மனோ தங்கராஜ்.
பாரதப் பிரதமரைப் பற்றி தவறாக டுவீட் செய்து, எதிர்ப்புகள் வந்ததும், அதை டெலிட் செய்தவர் தான் அமைச்சர் மனோ தங்கராஜ் என்று பேசினார்.
முன்னதாக, மதுரையில் சி.ஐ.ஐ. யங் இந்தியன் அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆவின் அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுப் பேசிய தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சவால் விட்டார்.
மேலும் அவர் பேசியதாவது: தமிழகத்தில் அடிப்படை அரசியல் நாகரிகம் இல்லை. இவர்கள் சொல்லும் பொய்களுக்கு ஏற்ப அதே மொழியில் தான் நான் திருப்பி பதில் சொல்கிறேன். தற்போது கட்சியை நடத்துபவர்கள் அதற்கு முன்னால் இருந்த கட்சித் தலைவர் மாதிரி ஒரு சதவீதம் கூட வாழவில்லை.
கோயில் சொத்துக்களை இஷ்டம் போல செலவு செய்கின்றனர். எந்த அரசியல் கட்சியிலும் நூறு சதவீத நல்லவர்கள் உள்ளனர் என சொல்ல முடியாது. பா. ஜ. விலும் எங்களைத் தாண்டி சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மக்களின் வரிப்பணத்தை கையாளும்போது தவறு நடந்து விடக்கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம்.
ஊழல்வாதிகள், தவறு செய்தவர்கள் சிறைக்கு உள்ளே தான் இருக்க வேண்டும். பாதயாத்திரைக்கு அடிக்கடி தடை ஏற்படுகிறது. கட்சிப்பணி, நிர்வாகம், இயற்கை சீற்றம், உடல் நிலையை கருத்தில் கொண்டு நடைபயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. வரும் ஜன.28ம் தேதிக்குள் பாதயாத்திரை முடிந்துவிடும் என்று அவர் பேசினார்.
இதனிடையே, தாங்கள் “சாவர்க்கர் பரம்பரை அல்ல என்றும், பெரியாரின் பேரன் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூகத் தளப் பதிவில், மன்னிப்பு கேட்காவிட்டால் என் தலையை சீவி விடுவாயா?, மன்னிப்பு கேட்க சாவர்க்கர் பரம்பரை அல்ல; பெரியாரின் பேரன் என பதில் கொடுத்துள்ளவர், எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்றதற்கான ஆதாரங்களைப் பொது வெளியில் வெளியிட வேண்டும்; இல்லையென்றால், அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை முன்னதாக அவரை எச்சரித்திருந்தார்.