புது தில்லி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி அளவில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வைரத் தொழிலதிபர் நிரவ் மோடியின் அமெரிக்க நிறுவனம் ஃபயர்ஸ்டார் டைமண்ட், திவால் ஆனதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் வைரத் தொழிலில் ஈடுபட்டு தொழிலதிபராக வலம் வந்தவர் நிரவ் மோடி. இவரது நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகளை பயன்படுத்தி, வெளிநாட்டு வங்கிகளுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து, சுமார் 11,300 கோடி ரூபாய் அளவில் கடன் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்சி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முக்கிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த மோசடியை நிகழ்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்து தேடுவதற்கு முன்னதாகவே, நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கியுள்ளனர்.
இதனிடையே, அமெரிக்காவில் தனது ஃபயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனம் திவாலானதாக நிரவ் மோடி பதிவு செய்துள்ளார். சுமார் ரூ.325 கோடி மதிப்பிலான சொத்துக்களும், ரூ.650 கோடி மதிப்பிலான கடனும் இருப்பதாக நியூ யார்க் நீதிமன்றத்தில் அவரது தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து நிரவ் மோடி கரீபியன் தீவுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அங்கே தொழில் தொடங்கி நிரந்தரக் குடியுரிமை பெறப் போவதாகவும் செய்திகள் வெளியாகியது குறிப்பிடத் தக்கது.