சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரச்சனையை தூண்டிவிட்டு அதை ஆக்கிரமிப்பதற்கு பல்வேறு வழிகளில் திமுக அரசு முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்து முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என பொது தீட்சிதர்கள் விளம்பர பலகை வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பிரச்னை செய்ய வேண்டும் என்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்துள்ளது.
அதிகமான கூட்டம் இருக்கும் காலங்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தள்ளு முள்ளு ஏற்படாமல் தவிர்க்கவும் கூட்ட நேரத்தில் மட்டும் கனக சபையில் ஏறி தரிசனம் செய்ய ஆலயத்தை நிர்வகிக்கும் தீட்சிதர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் ஆலயத்திற்கு சம்மந்தமில்லாத இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு வேண்டுமென மனு கொடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது.
ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், இராமேஸ்வரம் ஆகிய ஆலயங்களில் பக்தர்களை காவலர்கள் தாக்கும் போதும் வேடிக்கை பார்த்துவிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சம்மந்தமில்லாத இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தது வேடிக்கையாக உள்ளது.
அறநிலை துறை வசமுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் பராமரிப்பு இன்றி பாதுகாப்பு இன்றி பாலடைந்து வழிபாடு இல்லாமல் இருக்கும் போது அந்தக் கோவில்கள் மீது எல்லாம் இல்லாத அக்கறை சிதம்பரம் நடராஜர் கோவில் மீது எப்படி வருகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. இது முழுக்க முழுக்க அறநிலையத்துறைக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் மீது உள்ள வன்மமே காரணம்.
ஆகவே சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அதனை நிர்வகிக்கும் தீட்சிதர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு காவல் துறையும் அரசும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.