தமிழ் தினசரி இணையத்தின் பத்தாம் ஆண்டில், ஆன்மிக, சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு ’தெய்வத் தமிழர்’ விருது வழங்கும் விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள கோகலே சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. மார்ச் 10ம் தேதி ஞாயிறு அன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி நடைபெற்ற இந்த விழாவில், விளக்கு ஏற்றி, தமிழன்னை படத்துக்கும், தபோவனம் ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் திருவுருவப் படத்துக்கும் மலர்களால் அர்ச்சித்து வழிபடப் பட்டது.
பின்னர், நம்மாழ்வாரின் தனியன் மற்றும் திருவாய்மொழி செந்தமிழ் வேதப் பாசுரத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ் தினசரி தளத்தின் நிறுவுனரும் பத்திரிகையாளருமான செங்கோட்டை ஸ்ரீராம், தளத்தின் தொடக்கம், செயல்பாடு பற்றிக் குறிப்பிட்டு வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தமது இணைப்புரையில், இந்த நிகழ்ச்சி ஏன் என்பது குறித்தும், ’தெய்வத் தமிழர்’ விருது குறித்தும் குறிப்பிட்டு, அதைப் பெறுபவர்கள் குறித்த சிறப்பான அறிமுகத்தையும் வழங்கினார்.
தொடர்ந்து தொடக்க உரை நிகழ்த்திய கலைமகள் இதழின் ஆசிரியர் திரு.கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், தமிழ் தினசரி தளத்தைப் பற்றியும், ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள் பற்றியும் ஓரிரு சம்பவங்களை எடுத்துரைத்தார். தலைமை உரை நிகழ்த்திய புதுச்சேரி ஹோட்டல் ஸற்குரு மேலாண் இயக்குனர் திரு. கே.அமர்நாத் அவர்கள், தபோவனத்தின் மகிமை பற்றியும், தமிழ் தினசரி போன்ற செய்தித் தளங்களின் தேவை குறித்தும் உரை ஆற்றினார். தொடர்ந்து விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
பின்னர் ஆன்மிக, சமூகப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட ஐவருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது வழங்கப்பட்டது. வானிலையாளரும் எழுத்தாளருமான முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன், பத்திரிகையாளர் டி.எஸ்.வேங்கடேசன், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் பி.ஜகந்நாதன், ஓவியரும் சமூக சேவகருமான ஜெ.பிரபாகர், ஆன்மிக சொற்பொழிவாளர் ஜெயந்தி ஐயங்கார் ஆகியோருக்கு தெய்வத் தமிழர் விருதுகள் வழங்கப்பட்டன.
ஒரே நாடு பத்திரிகையின் ஆசிரியர் திரு. நம்பி நாராயணன், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் துணை பொதுமேலாளராக இருந்த திரு. ஆர்வீயெஸ், எழுத்தாளர் சிவன் ஆகியோர், விருது பெற்றவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் பேசினார்கள் பின்னர், விருது பெற்றவர்கள், ஏற்புரை நிகழ்த்த, விழாவின் முதல் பகுதி நிறைவடைந்தது.
தொடர்ந்து, தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள் குறித்த இசைச் சொற்பொழிவு நடைபெற்றது. ஹரிகதை சிந்துஜா இசைச் சொற்பொழிவு நிகழ்த்தினார். வந்திருந்த அன்பர்கள் ஆன்மிக அனுபவமும் இலக்கிய அனுபவமும் ஒருங்கே பெற்றார்கள்.