மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுடன் கூட்டணி அமைத்து பாமக., போட்டியிடுகிறது. கூட்டணியில் பாமக.,வுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடியுடன் மேடையில் பாமக., தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒன்றாக பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக., பாமக., இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு கையெழுத்தாகிறது.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத்துக்கான முதல் கட்டத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, கூட்டணி, தொகுதிப் பங்கீடு இவை குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பேசி வருகின்றன. முன்னதாக முதல் கூட்டணியாக திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேசி அறிவித்து தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்து வேலைகளில் இறங்கி விட்டன.
பாஜக.,வின் தே.ஜ., கூட்டணியில் சிறு சிறு கட்சிகள் இணைந்து கடந்த காலங்களில் நடைபெற்ற பிரதமர் மோடியின் கூட்டங்களில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். எனினும் பெரிய கட்சியான பாமக.,வுடன் பேச்சுவார்த்தையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள்.
அதேநேரம் கடந்த சில நாட்களாக பாமக.,வுடன் அதிமுக.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். எனினும் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக., பொதுச்செயலர் பழனிசாமியின் இல்லத்தில் பாமக., சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது. எனினும் தாங்கள் பழனிசாமியை சந்திக்க செல்லவில்லை என அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர், பாமக., எம்எல்ஏ., சேலம் அருள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், கூட்டணி தொடர்பாக முடிவெடுப்பதற்காக பாமக.,வின் உயர்மட்டக் குழு திங்கள்கிழமை நேற்று கூடியது. மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பாமக., நிர்வாகிகளுடன் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக., மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பாஜக.,வுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதன் பின்னர் செவ்வாய்க் கிழமை இன்று காலை பாஜக., பாமக., கட்சிகளிடையே தொகுப் பங்கீடு ஒப்பந்தம் மேற்கொள்ள பாஜக., தலைவர் அண்ணாமலை, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், பாமக., தலைவர் அன்புமணி ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது மகிழ்ச்சிகரமான சூழல் நிலவியதாகக் கூறப்பட்டது. இதன் பின்னர் இரு தரப்பும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
தைலாபுரத்தில் அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, “10 ஆண்டு காலமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வருகிறோம். இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுடன் இணைந்து போட்டியிடுகிறோம். நாட்டின் நலன் கருதியும் கட்சியின் நலன் கருதியும் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி தொடர தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது வெறுப்பான சூழல் உள்ளது. மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். இதற்கென இந்த முடிவை எடுத்துள்ளோம். மோடி 3வது முறையாக பிரதமராவார்“. இவ்வாறு” என்று, அன்புமணி கூறினார்.
பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய போது, “பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த பாமக., இணைந்துள்ளது. இதற்கு ராமதாசுக்கு நன்றி. ராமதாஸ் கனவை மோடி நிறைவேற்றுவார். இது வலுவான கூட்டணி. மக்கள் புதிய மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகின்றனர். எனவே இந்தக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள். நேற்று இரவில் இருந்து தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2026 ல் அனைவரும் நினைக்கும் மாற்றம் வரும். மோடியின் மேடையில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் அமர வேண்டும். அதற்காக இன்று அவசர, அவசரமாக சேலம் வந்தோம். இந்தியாவுக்கு வழிகாட்டும் தலைவராக ராமதாஸ் இருப்பார். அவருக்கு நல்ல மரியாதை அளிப்போம். 10 தொகுதிகளில் பாமக., போட்டியிடும்” என்று தெரிவித்தார்.