
சில உரையாடல்கள் உண்மையிலேயே அற்புதமாக அமைந்து விடுவதுண்டு — அவை திட்டமிடப்பட்டவை என்பதால் அல்ல, மாறாக எதிர்பாராத விதமாக நிகழ்வதால்.
ஃபிராங்பர்ட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த மனித வள மேம்பாட்டாளரும், புத்தக ஆசிரியருமான ஒருவர் சதுரங்க உலக No.1 பிரக்ஞானந்தா தமக்கு மிக அருகில் அமர்ந்திருந்ததைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஆனால் பிரக்ஞானந்தா வெளிப்படையாகவே சோர்வாகக் காணப்பட்டதால், அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
இந்தச் சந்திப்பை இன்னும் சிறப்பாக்கியது என்னவென்றால், சில நாட்களுக்கு முன்புதான், செயின்ட் லூயிஸில் நடந்த போட்டியில் நடப்புச் சாம்பியனான ஃபேபியானோ கருவானாவை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் ஒரு பிரமிக்க வைக்கும் மீள்வருகையில் தோற்கடித்து, “கிராண்ட் செஸ் டூர்” பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்திருந்தார். அந்த வெற்றியுடன் $200,000 பரிசும் கிடைத்தது.
சென்னையில் விமானம் தரையிறங்கிய பிறகு, அவருடன் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் உரையாடும் வாய்ப்பு அந்த புத்தக ஆசிரியருக்கு கிடைத்ததாம். “கன்வேயர் அரங்கில் தங்களது பயண சாமான்கள் முதலில் வரவேண்டுமே,” என்று எப்போதும் ஏங்கிய காலம் சென்று, அன்று முதல் முறையாக, அவரது பெட்டி பொருள்கள் கடைசியாக வர வேண்டும் என்று மனுஷர் உண்மையில் பிரார்த்தனை செய்துள்ளார்.
அவர்கள் இருவர் நடுவே நடந்த உரையாடலில், பிரக்ஞானந்தா தமது விளையாட்டு அட்டவணைகள், போட்டிகளுக்கும் தொடர்களுக்கும் இடையிலான அழுத்தம் மற்றும் பதற்றத்தை எவ்வாறு கையாளுகிறார், மேலும் தனிப்பட்ட நகர்வுகளின் தீவிரத்தை அவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பது பற்றியும் பேசப்பட்டது. தியானம் அவரை அமைதியாக இருக்கவும், சிறப்பாக நிர்வகிக்கவும் எவ்வாறு உதவுகிறது என்கிற சூக்ஷுமத்தையும் பகிர்ந்துகொண்டாராம்.
பிரக்ஞானந்தாவின் குடும்பத்தைப் பற்றிப் பேச்சு வந்த போது —அவருக்குப் பலத்தின் தூணாக இருந்த அவருடைய தாய், மற்றும் அவருக்குச் சதுரங்கத்தை அறிமுகப்படுத்திய அவருடைய மூத்த சகோதரி, விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இந்திய, உலகச் சதுரங்கத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அனைத்தும் பற்றி பிரக்ஞானந்தா மிகுந்த மரியாதையுடன் பேசினார்.
ஆனால், பிரக்ஞானந்தா என்கிற அந்த வெற்றி யாளருக்குப் பின்னால் இருந்த மனிதர்தான் தம்மை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
விமானப் பயணத்தின் போதும், பின்னர் விமான நிலையத்திலும், செல்ஃபி எடுக்க அவரை அணுகிய மக்களுக்கு அவர் பொறுமையாகவும் அன்பாகவும் பதிலளிப்பதை பார்த்த போது, நீண்ட பயணம் மற்றும் வெளிப்படையான சோர்வு இருந்தபோதிலும், பிரக்யானந்தா அன்பாகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும், பணிவாகவும் இருந்தார்என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். .
“சதுரங்க வரலாற்றில் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டி, 200,000 டாலர்களை வென்ற ஒரு இளம் விளையாட்டுப் பிரபலம் அவர்; ஆனாலும், அவரிடம் எந்தவிதமான ஆணவப் போக்கு துளி கூட தெரியவில்லை. அவர் ஒரு வழக்கமான சென்னைப் பையனைப் போலவே அமைதியாகவும், நிதானமாகவும், அடக்கமாகவும் நடந்துகொண்டார். வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, பிரக்ஞானந்தாவுடனான – ஒரு சதுரங்க சாம்பியனுடனானஅந்த 15 நிமிடங்கள் – உரையாடலைப் போலத் தோன்றவில்லை; மாறாக, ஒழுக்கம், நிதானம், அழுத்தத்தைச் சமாளித்தல், குடும்ப ஆதரவு, எல்லாவற்றிற்கும் மேலாகப் பணிவு போன்ற விளையாட்டுத் தலைமைத் துவத்திற்கான ஒரு சிறந்த பாடத்தை கற்றது போலவே இருந்தது என்பதை உணர்ந்தேன். சதுரங்கப் பலகை பிரக்ஞானந்தாவை ஒரு வெற்றியாளராக மாற்றியிருக்கலாம்; ஆனால், இது போன்ற தருணங்களே அந்த வெற்றி யாளருக்குப் பின்னால் உள்ள உண்மையான ஆளுமையை வெளிப்படுத்துகின்றன.சில சமயங்களில், திட்டமிடப்படாத தருணங்களே அழியாத நினைவுகளை விட்டுச் செல்கின்றன.வாழ்த்துகள் பிரக்ஞானந்தா.. இந்தியாவிற்கும் சென்னைக்கும் நீங்கள் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளீர்கள்.” என்று பதிவு செய்துள்ளார் அந்த ஆசிரியர்.
- ஆர். கே.


