விரல் கறை நல்லது… சரியான அரசைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால்..!

Published:

vote
vote

அன்புள்ள வாக்காளரே!

வணக்கம். இன்னும் சில நாட்களில் விரலைக் கறை படுத்திக் கொள்ளப் போகிறீர்கள். ஆனால் கறை நல்லது, நீங்கள் சரியான அரசைத் தேர்ந்தெடுப்பீர்களேயானால்.

பொதுவாகத் தேர்தலின் போது எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள் என்று அறிவுரை சொல்வார்கள். ஆனால் நான் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து முடிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்று நம் முன் ஐந்து வாய்ப்புக்கள் நிற்கின்றன. அவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை விட எவற்றையெல்லாம் நிராகரிப்பது என்று சிந்தித்தால் நாம் தேர்ந்தெடுக்கக் கூடியது எது என்பது தானே தெளிவாகிவிடும்.

நாம் தமிழர் என்றொரு கட்சி களத்தில் நிற்கிறது. அந்தக் கட்சி விடுதலைப் புலிகளின் சித்தாந்தால் மன ஊக்கம் பெற்று (inspiration) உருவானது. அதன் ஆதர்ச தலைவர் பிரபாகரன். அவரது அணுகுமுறை இந்தக் கட்சித் தலைவரிடமும் பிரதிபலிக்கிறது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை மரத்தில் கட்டி வைத்து தோலை உரித்து பனைமட்டையால் விளாச வேண்டும், தன் முடிவை ஏற்காதவர்களை கிரீஸ் டப்பாவை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன் என்றெல்லாம் அவர் பகிரங்கமாகப் பேசுகிறார். சுருக்கமாகச் சொன்னால் அது அரசியல் கட்சியல்ல, ஒரு வழிபாட்டுக் கும்பல் (Cult) அதை நிராகரித்து விடலாம்

edappadi

அமமுக, மக்கள் நீதி மய்யம் இரண்டும் தனிநபர்களின் சுயநலத்தால் உருவானவை. சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டுவிட்டார். அந்த நிலையில் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள கட்சியும் தேர்தலிலிருந்து ஒதுங்கியிருக்கத்தானே வேண்டும்? சசிகலா, திமுகவை வீழ்த்துவதுதான் நமது நோக்கம் என்று அறிவித்து இருக்கிறார். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட கட்சி, திமுகவை வீழ்த்தும் நோக்கம் கொண்ட அதிமுகவைத்தானே வலுப்படுத்த வேண்டும்? அதற்கு மாறாக திமுகவிற்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க முற்படுவது ஏன்?

ஏனென்றால் தேர்தல் வெற்றியை அல்ல, தேர்தலுக்குப் பின் பேரம் நடத்தி, ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டத் தன்னை மீண்டும் கட்சிப் பொறுப்பில் பிணைத்துக் கொள்வதை எதிர்பார்த்து, தினகரன் களம் இறங்குகிறார். அவரது சொந்த நலனைக் காப்பாற்ற நாம் வாக்களிக்க வேண்டியதில்லை

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

கமல்ஹாசனின் கட்சி தோன்றக் காரணம் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட இடைஞ்சல். அப்படி இடைஞ்சல் ஏற்பட்டிருக்காவிட்டால் என் சொத்து மதிப்பு ரூ 200 கோடி இருந்திருக்கும் (இப்போது 177 கோடி) என்கிறார். தனக்கு ஏற்பட்ட பண இழப்புக் காரணமாக பழி வாங்க அரசியலில் நுழைந்திருக்கிறார். அதற்கு முன்பு அவர் அரசியல் பிரசினைகள் குறித்து சினிமாவிலோ, வெளியிலோ ஏதும் கருத்துச் சொன்னதில்லை என்பதை இதோடு பொருத்திப் பார்த்தால் உண்மை புரியும்.

kamal

தன்னை காந்தியின் பி டீம் என்கிறார் கமல்..காந்தி தனது எல்லாக் கூட்டத்தையும் பிரார்த்தனையோடு தொடங்கினார். ரகுபதி ராகவ ராஜாராம் பிரபலமானது அவரது கூட்டங்களின் மூலம்தான். கமல்ஹாசனுக்கு இறை நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்ற அவரது திருவாசகத்தின் பொருள் புரியாமல் விழிக்கிறான் பாமரன். கடவுளை நம்பாதவர் காந்தியின் பீ டீம் ஆக இருக்க முடியுமா?

ஒரு பக்கம் தன்னை காந்தியின் பி டீம் என்று சொல்லிக் கொள்பவர், தன்னை பெரியாரின் சீடர் என்றும் சொல்லிக் கொள்கிறார். காந்தியை பிரிட்டீஷ் அரசின் ஒற்றர், கவர்மெண்டின் ரகசிய அனுகூலி, உழைக்கும் மக்களின் துரோகி என்றெல்லாம் எழுதியவர் பெரியார் (19.2.1933, குடி அரசு தலையங்கம்) பெரியாரின் சீடர் எப்படி காந்தியின் பி.டீமாக இருக்க முடியும்?

திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தால் அதன் 2006-11 ஆட்சிக்காலம் நினைவுக்கு வருகிறது. மின்வெட்டு, நிலப்பறிப்பு, அதிகாரிகளை மிரட்டுவது, அரைப் பிளேட் பிரியாணிக்கும் பராட்டோவிற்கும் அடிதடி, அராஜகம், ரெளடியிசம் இவையெல்லாம் நினைவிலாடுகின்றன.

ஆரம்ப நாட்களிலிருந்து இன்றுவரை திமுகவில் நீடிக்கும் ஒரே விஷயம், இந்து மத வெறுப்பு, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுவது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

நான் எல்லாவற்றையும் விட முக்கியமாகக் கருதுவது அது குடும்ப ஆட்சியை நிறுவ முயல்வதை. குடும்ப உறுப்பினர்கள் அரசியல் கட்சியில் இருப்பதற்கும் ஓர் அரசியல் கட்சி குடும்பத்தின் கையில் இருப்பதற்கும் பெருத்த வித்தியாசங்கள் உண்டு. அப்போதும் கூட அது அந்தந்த கட்சிக் காரர்களின் தலையெழுத்து என்று நாம் பொருட்படுத்தாமல் இருந்து விடலாம். நாம் கட்சியின் உறுப்பினர்களாக இல்லாதவரை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விடலாம். ஆனால் அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் பெற்றுத்தர முற்படும் போது நாம் அதை நிராகரிக்கும் வகையில் செயல்பட்டாக வேண்டியிருக்கிறது. நம் தனிவாழ்வு, தொழில், சமுக வாழ்வு இவற்றின் மீது நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகாரம் செலுத்தி வரும் அமைப்புஅரசு . அந்த அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் கையில் ஒப்படைத்தால் என்னவாகும்?

modi

அதிமுக அரசு இருண்டகாலத்திலிருந்து தமிழகத்தை விடுவித்தது. அதன் ஆட்சிக்காலத்தில் எதிர்மறையாக ஏதும் பெரிதாக செய்துவிடவில்லை. நீட் ஜிஎஸ்டி எல்லாம் தமிழ்நாட்டிற்கு எனப் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டவை அல்ல. நாடு முழுமைக்குமானவை. நீட் தேர்வு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது (உதாரணம் பஞ்சாப், ராஜஸ்தான்) திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளத்திலும் நடக்கிற்து.

GST விகிதங்களைத் தீர்மானிப்பது ஒரு தனிநபரல்ல. ஓர் அரசுத் துறை அல்ல. ஒரு குழு -கவுன்சில் – தீர்மானிக்கிறது. அந்தக் கவுன்சிலில் எல்லா மாநில பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். உதாரணமாக தில்லியின் சார்பில் மனீஷ் சிசோடியா (பாஜக) புதுச்சேரியின் சார்பில் நாராயணசாமி (காங்கிரஸ்( வங்கத்தின் சார்பில் அமித் மித்ரா (திருணாமூல்) கேரளத்தின் சார்பில் தாமஸ் ஐசக (மார்க்சிஸ்ட்)

எப்போதும் அதிமுகவின் அணுகுமுறை என்பது சட்டரீதியாக சாதிக்க முடிந்தவற்றிற்கு நீதிமன்றங்களை நாடுவது (உதாரணம்: காவிரி,) சட்டப்போரட்டத்தின் மூலம் சாத்தியமாகதவற்றிற்கு மாற்று வழிகளைக் காண்பது (உதாரணம் : 69% இட ஒதுக்கீட்டிற்கு ஒன்பதாம் அட்டவ்ணை மூலம் சட்டப் பாதுகாப்பு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு)

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

எடப்பாடி அரசு மத்திய அரசோடு இணக்கமாக இருந்து திட்டங்களைப் பெற்று வருகிறது (உதாரணம் 11 மருத்துவக் கல்லூரிகள், மெட் ரோ ரயில் விரிவாக்கம்) தமிழக அரசின் வருவாய் முதன்மையாக மூன்று வழிகளில் வருகின்றன. 1.ஜி எஸ் டி (அதில் ஒரு பங்கு மத்திய அரசுக்குரியது) 2. பதிவுக் கட்டணங்கள் (நிலம், வீடு, வாகனங்கள்) 3. டாஸ்மாக். இந்த வருமானத்திலிருந்து அது அரசு ஊழியர் சம்பளம், விலையில்லா அறிவிப்புகள், போன்றவற்றையும் பிற செலவுகளையும் எதிர் கொண்டு பின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவிடுவது என்பது மிக சிரமம். அனேகமாக சாத்தியமில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலும் (கடன் வாங்கக் கூட) நிதியும் தேவை . இதற்கு இரு அரசுகளுக்குமிடையே நல்லுறவு தேவை.

stalin

மத்திய அரசோடு மோதல் போக்கை கடைப்பிடிப்பது அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமானால் தங்கள் பிம்பங்களைக் கட்டமைத்துக் கொள்ள உதவலாம். மாநில வளர்ச்சிக்கு உதவாது. அதற்கு யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு நடைமுறை சாத்தியமாக முடிவெடுக்கும் pragmatic அரசுதான் தேவை.

தேர்தல் என்பது இருப்பதில் எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புதான். வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்றாட வாழ்வில் பெரும் பிரசினைகளை ஏற்படுத்தாத அதிமுக ஆட்சி தொடர வாக்களியுங்கள்

எண்ணித் துணிக கருமம்.
அன்புடன்
மாலன்

Related articles

Recent articles

spot_img