கண் முதல் கல்லீரல் வரை தானம் தந்து வானுலகம் அடைந்த இளைஞன்! உருக்கிய நிகழ்வு!

Published:

ramnad 1 - 2026

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உள் உறுப்புக்கள் எட்டு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் வெற்றிவேல், ராஜேஸ்வரி. இவர்களின் மகன் சரத்குமார் (23) தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.

கடந்த 11ம் தேதி வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் வந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். சுயநினைவு இழந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறினர்.

ramnad 2 - 2026

இதைத் தொடர்ந்து மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சரத்குமார். அங்கு நிலைமை மோசமடைந்தது, மீண்டும் அவர் கண் விழிக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்தாரா என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு, சரத்குமார் மூளைச்சாவு அடைந்தார் என்று அறிவித்தனர்.

செயற்கை சுவாசம் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகள் அகற்றிவிட்டால் அவர் உயிர் பிரிந்துவிடும். அதே நேரத்தில், அவரது உடல் உறுப்புக்களைத் தானமாக வழங்கினால் பல குடும்பங்கள் வாழ்வு பெறும் என்று டாக்டர்கள் கூறினர். இதனால், மனதை தேற்றிக்கொண்ட சரத்குமாரின் பெற்றோர், உடல் உறுப்புக்களை தானமாக வழங்க முன்வந்தனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
ramnad 3 - 2026

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உடல் உள் உறுப்புக்கள் தேவைப்படுபவர்களில் சரத்குமார் உடல் உறுப்பு யாருக்குப் பொருந்தும் என்று ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கண் முதல் கல்லீரல் வரையிலான உள் உறுப்புக்கள் அறுவைசிகிச்சை செய்து எடுக்கப்பட்டன.

சரத்குமாரின் கண்கள் திருச்சிக்கும், இதயம் சென்னைக்கும், சிறுநீரகங்கள் மதுரை மற்றும் தஞ்சாவூரில் உள்ள நோயாளிகளுக்கும், கல்லீரல் கோவைக்கும் அனுப்பப்பட்டது.

இப்படி சரத்குமார் உடலிலிருந்து எடுக்கப்பட்ட உள் உறுப்புக்கள் எட்டு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன கோவைக்கு மருத்துவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் கல்லீரல் கொண்டு செல்லப்பட்டது.

ramnad - 2026

வட்டமலையாம் பாளையத்தில் தரை இறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து கல்லீரலை சுமந்துகொண்டு மிக விரைவாக ஆம்புலன்ஸ் பறந்தது.

ஆம்புலன்ஸ் எந்த தடையுமின்றி விரைவாக மருத்துவமனையை அடைவதற்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பொது மக்களும் ஒத்துழைப்பு அளித்து கல்லீரல் மருத்துவமனையை அடைய உதவினர்.

சரத்குமாரின் மரணம் சோகத்தை ஏற்படுத்தினாலும், சாகும் நேரத்திலும் தானம் செய்த செயல் பாராட்டைப் பெற்று வருகிறது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img