மேற்கு வங்கத்தில் கடந்த 4 நாட்களாக நடந்து வரும் டாக்டர்கள் ஸ்டிரைக் 4 மணி நேரத்தில் கைவிடப்பட வேண்டும். பணிக்குத் திரும்பாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி மிரட்டியுள்ளார். அதே நேரம், இந்த டாக்டர்கள் ஸ்ட்ரைக்குக்குக் காரணம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
கடந்த திங்கள் கிழமை கோல்கட்டாவில் உள்ள என்.ஆர்.எஸ்., மருத்துவக் கல்லுாரியில் நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் மருத்துவர் ஒருவரைத் தாக்கியதில், தலையில் காயம்பட்டு அந்த டாக்டர் உயிரிழந்தார். இதனைக் கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் திங்கள் கிழமை இரவு முதல் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.
இந்த வேலை நிறுத்தம் 4 வது நாளை எட்டியுள்ளது. இதனால் கோபம் அடைந்த மம்தா, எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது, அங்கே அவரை ஜூனியர் டாக்டர்கள் சூழந்து கொண்டனர். பின் ‘எங்களுக்கு நீதி வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
இதனால் மேலும் கோபமடைந்தார் மம்தா! கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அடுத்த 4 மணி நேரத்தில் பணிக்கு திரும்பாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இது குறித்து மருத்துவமனைக்கு வெளியே அவர் கூறிய போது, இது சிபிஎம் மற்றும் பாஜக.,வினரின் சதி என்றார்.
இதனிடையே கோல்கட்டா டாக்டர்கள் போராட்டத்தை ஆதரித்து புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஹெல்மெட்களை அணிந்தபடி நோயாளிகளுக்கு டாக்டர்கள் மருத்துவம் பார்த்தனர்.
‘நாங்கள் டாக்டர்கள்; தீவிரவாதிகள் இல்லை’ என்று எழுதப்பட்ட அட்டைகளுடன் ஆர்ப்பாட்டத்திலும் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் மம்தா விடுத்த மிரட்டலால் மேற்கு வங்க டாக்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நீல் ரத்தன் சிர்கார் மருத்துவக் கல்லூரி – என்ஆர்எஸ்எம்சி.,யின் ஜூனியர் டாக்டர்களை தூண்டி விடுவது பாஜக., என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பில் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.
இந்து முஸ்லிம் மத மோதல்களை அமித் ஷா தூண்டிவிட்டுள்ளார், நோயாளிகளை இந்துக்கள், முஸ்லிம்கள் என்று பிரிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், கும்பலாகத் தாக்குதல் நடத்தும் குறிப்பிட்ட அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மம்தா பானர்ஜியின் வாக்காளர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளது பாஜக.,! அதனால்தான் மம்தா, அவ்வாறு தாக்கியவர்கள் குறித்து இவ்வாறு பரிந்து பேசுகிறார்; தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்த டாக்டர் குறித்து பேச மறுக்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர் பாஜக.,வினர்.