சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 350 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மெக்கா மசூதிக்கு வெளியே இச்சம்பவம் நடைபெற்றதாக சவுதி அரேபிய டிவி உறுதி செய்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானவர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இன்று (செப்.,24) பக்ரீத் என்பதால் அதிகமானவர்கள் வழிபாடு நடத்த மெக்கா நகரில் குவிந்தனர். அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் மினாவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர்.500 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் 4 ஆயிரம் பேரும், பல வாகனங்களும் ஈடுபட்டுள்ளன .
இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு மட்டும் இதுவரை 1,36,000 பேர் ஹஜ் யாத்திரை சென்றுள்ளனர். இவர்களின் நிலை குறித்த தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்துள்ளார்.
படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் அவசர நிலை சிகிச்சைகள் அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொபைல் மருத்துவமனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மலேசியா, இந்தோனேஷியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என சர்வதேச ஹஜ் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.
மெக்கா நகரில் இம்மாதத்தில் நடைபெறும் இரண்டாவது பயங்கர விபத்து இது. கடந்த சில நாட்களுக்கு முன் மெக்கா மசூதியில் கிரேன் விழுந்த சம்பவத்தில் 105 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.


