தேர்தல் வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து முடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்து உள்ளது.மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2012-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாய்ரெம்பாம் பிரிதிவிராஜ் என்பவரை எதிர்த்து சரத்சந்திர சிங் என்பவர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ‘‘பிரிதிவிராஜ் மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதுநிலை பட்டம் பெற்றிருப்பதாக தேர்தலின்போது தனது வேட்பு மனுவில் தெரிவித்து இருக்கிறார். இது தவறான தகவல் ஆகும். எனவே அவருடைய வெற்றியை செல்லாது என அறிவிக்கவேண்டும்’’ என்று அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை மணிப்பூர் ஐகோர்ட்டில் அவ்வப்போது தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வழக்கு விசாரணை தாமதம் ஆவதாக கூறி சரத்சந்திரசிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
ஜனநாயகத்தின் புனிதத்தை காப்பாற்ற தேர்தல் தொடர்பான வழக்குகள் விரைவுபடுத்தப்படவேண்டும். ஏனெனில் ஒரு வாக்காளர் தனது வாக்கை பொறுப்பான ஒரு குடிமகனை தேர்ந்தெடுப்பதற்காக பயன்படுத்துகிறார்.
எனவே, வாக்காளர்களின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது வெற்றி பெற்றவர் வாக்காளர்களின் நம்பிக்கையை பெறுவது முக்கியமானது. தொடர்ந்து வழக்கை இழுத்தடிக்கும் வழிமுறையை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடாது.
தேர்தல் வழக்குகள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை 6 மாதத்துக்குள் முடித்து வைக்கவேண்டும். ஏனெனில் வழக்கை தாமதப்படுத்தும் போக்கை எந்த வகையிலும் சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே இந்த வழக்கை 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


