வேலுார் சிறையில், செல் போனை பறித்து ஓடிய கைதியை விரட்டிப் பிடித்து, சிறை காவலர் பறிமுதல் செய்தனர்.வேலுார், தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில், சிறை காவலர் பாலமுருகன் சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஆறாவது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த, ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த அந்தோணி, 43, மொபைல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.
சிறை காவலர் பாலமுருகன் அவரிடமிருந்து, செல்போனை பறிமுதல் செய்தார். இதனால், அதிர்ச்சியடைந்த கைதி அந்தோணி, திடீரென, சிறைக் காவலரிடமிருந்து, செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார்.அவரை, பாலமுருகன் துரத்திச் சென்றார். பல இடங்களில் ஒளிந்து, ஒளிந்து சென்ற அந்தோணியை, அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக, பாலமுருகன் பிடித்து, சிறை அலுவலர் தாமரைச்செல்வனிடம் ஒப்படைத்தார்.சிறை அலுவலர் தாமரைச்செல்வன் கொடுத்த புகாரின் படி, பாகாயம் போலீசார், அந்தோணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


