இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற வாய் காது கேளாத பேசமுடியாத, பெண் கீதா 15 வருடங்களுக்கு பிறகு இந்தியா திரும்பியுள்ளார்.
நேற்று முன்தினம் இந்தியா திரும்பிய கீதாவை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். பிரதமர் மோடி கீதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், இத்தனை ஆண்டுகள் அவரை பாகிஸ்தானில் கவனித்து வந்த தொண்டு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து, ரூ.1 கோடி நன்கொடை வழங்குவதாக அறிவித்தார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கீதாவை ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து சந்தித்தார்.
அவர் கீதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது முகாம் அலுவலகத்தில் கீதாவை சந்தித்தார். மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் கெஜ்ரிவால் கீதாவிடம் சிறிது நேரம் பேசினார். கீதா இந்தியா திரும்பிய அதேவேளையில், 15 வயதான பாகிஸ்தான் சிறுவன் ரம்ஜான் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. எதிர்பாராதவிதமாக இந்த இரு சம்பவங்களும் ஒரே நேரத்தில் நடந்துள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அன்றாடம் குண்டு மழை பெய்துவரும் வேளையில் இந்த மனிதாபிமான செயல்களும் அரங்கேறியுள்ளன. கீதா பாகிஸ்தானில் இருந்தபோது இந்திய தூதரகம் அனுப்பிய போட்டாக்களை பார்த்து, பீகாரை சேர்ந்த ஜனார்தன் மஹாதோ தான் தனது தந்தை என்றும், வளர்ப்பு தாய் மற்றும் சகோதரர்களையும் அடையாளம் காட்டியிருந்தார். ஆனால் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்க வந்த அவர்களை கீதா அடையாளம் காட்டவும், ஏற்கவும் மறுத்துவிட்டார். இதனால் கீதா மற்றும் அவரது தந்தை என கூறப்படும் ஜனார்தன் மஹாதோவுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடைபெறுகிறது.
டி.என்.ஏ. சோதனை மூலம் கீதா சரியான பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கீதாவை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியும் தங்கள் மகள் என்று உரிமை கோரியுள்ளது. பிரதாப்கார் மாவட்டம் ராம்பூர் கிராமத்தை சேர்ந்த ராம்ராஜ்-அனரா தேவி தம்பதியினர் கீதா எங்கள் மகள் என்று கூறியுள்ளனர்.
இதற்கான போட்டோக்கள், வேறு சில ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. நாங்கள் டி.என்.ஏ. சோதனைக்கும் தயாராக இருக்கிறோம் என்று அனரா தேவி கூறினார். எங்கள் மகள் சவீதா தான் கீதா. 12 வருடங்களுக்கு முன்னர் அவர் பீகார் நானக் ஷா மடத்தில் இருந்து காணாமல்போனார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அலகாபாத்தில் உயர் அதிகாரிகளையும் அந்த தம்பதியினர் சந்தித்து விளக்கினார்கள். கீதாவை சந்திப்பதற்காக அவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.


