‘நுாற்றுக்கணக்கான ஆண்டுகளாக, சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது, இந்துக்களின் பாரம்பரியமாக உள்ளது. இதற்கு எதிராக தடை விதிப்பது, இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்’ என, பட்டாசு தொழிற்சாலைகள் சங்கமும், இந்து மத அமைப்புகளும், உச்ச நீதிமன்றத்தில் நேற்று, பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி, மூன்று குழந்தைகள் சார்பாக, உச்ச நீதிமன்றத்தில், ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபடுகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமை, அத்தியாவசியமானது. பட்டாசு புகையால், குழந்தைகள் பெரிதும் பாதிக்கின்றனர்; எனவே, பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும்’ என, கூறப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், சிவகாசியை சேர்ந்த, தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தது. அதில்
கூறப்பட்டுள்ளதாவது:தீபாவளி பண்டிகையின் உள்ளார்ந்த அங்கம், பட்டாசு கள். பண்டிகையின் போது சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசுகள் வெடிப்பது, நம் நாட்டின் பாரம்பரியமாக உள்ளது.
இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதங்களை சேர்ந்தவர்களும், தீபாவளி பண்டிகையில் ஆர்வமாக பங்கேற்கின்றனர். ஒளியும் சத்தமும், தீபாவளி பண்டிகையின் அம்சங்கள். மாறாக, இருளும் அமைதியும் துயரத்தை குறிக்கின்றன. தீபாவளி பண்டிகையின் போது, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள், நாடு முழுவதும் வெடிக்கப்படுகின்றன. இவற்றை தயாரிக்க, சிவகாசியில் மட்டும், 350 தொழிலகங்கள் உள்ளன. இவற்றின் மூலம், மூன்று லட்சம் பேருக்கு நேரடியாகவும்; 10 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.
பட்டாசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், ஒட்டுமொத்த பட்டாசு தொழிலும் முடங்கும். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும்.இவ்வாறு பட்டாசு தொழிற்சாலைகள் சங்கத்தின் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.
சிவகாசியை சேர்ந்த, அருள்மிகு ஸ்ரீ அய்யப்பன் சங்கம் தலைமையிலான, இந்து அமைப்புகள் தாக்கல் செய்த பதில் மனு விவரம்:
உலகம் முழுவதும், பண்டிகைகளின் போது சந்தோஷத்தை வெளிப்படுத்த, மக்கள் பட்டாசுகளை வெடிக்கின்றனர். இதற்கு தடை விதிப்பது, இந்து மக்களின் கலாசார, பாரம்பரிய உரிமைகளை பாதிக்கும்.
தீபாவளி, சுதந்திர தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ், விளையாட்டுகள் மற்றும் தேர்தலில் வெற்றி, திருமணம் ஆகிய நிகழ்வுகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இந்த கொண்டாட்டங்களை, முறைகேடான தடை உத்தரவால் சீரழிக்கக் கூடாது. இந்து மத நம்பிக்கையின் படி, பூமியில் வாழும் மக்கள், தம் சந்தோஷத்தை, விண்ணில் உள்ள கடவுளர்களுக்கு வெளிப்படுத்த பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.
எனவே, இதற்கு தடை விதிப்பது, இந்து மத நம்பிக்கைக்கு எதிரானது.இவ்வாறு, இந்து மத அமைப்புகள் சார்பில் தாக்கலான மனுவில் கூறப்பட்டது. மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த மனு விவரம்:தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் மட்டுமே காற்று மாசடைவதில்லை; காற்று மாசடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. தொழிற்சாலைகள், ரயில்வே, கப்பல், விமானப் போக்குவரத்து, கட்டுமானம், புவி – தட்பவெப்ப நிலை, பயிர்களை எரித்தல், வாகனப் புகை, வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாதல் உள்ளிட்ட பல காரணங்கள், காற்று மாசடைதலுக்கான காரணமாக உள்ளன. நடவடிக்கைகள்காற்று மாசடைவதை, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பன்னடுக்கு ஒழுங்கு முறை நடவடிக்கை மற்றும் கூட்டு முயற்சியால் தடுக்கலாம். மத்திய அரசு, இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டது. இவ்வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, இன்று விசாரிக்கிறது.


