சென்னை:
10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:
தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதனை ஏற்று, ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் நாளை முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 6,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும்;
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
அந்த வேண்டுகோளினை ஏற்று, கோமுகி அணையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


