
கோவை :
குஷ்புவை பற்றி நான் எதுவும் விமர்சிக்கவில்லை. எந்தத் தனிநபரைப் பற்றியும் விமர்சிக்கவும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
அண்மையில் குஷ்பு குறித்து அவர் விமர்சித்ததாகவும், அதற்கு பதிலடியாக குஷ்பு பேட்டி அளித்தும் அண்மைக் காலத்தில் ஊடகங்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது. இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கார்த்தி சிதம்பரம்…
“குஷ்புவை பற்றி நான் எதுவும் விமர்சிக்கவில்லை. எந்தத் தனிநபரை பற்றியும் நான் விமர்சிக்கவில்லை. விமர்சிக்க விரும்பவும் இல்லை. என்னிடம் நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இருக்கிறதா என கேட்டார்கள். அதற்கு நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என்று தான் சொன்னேன். மற்றபடி நான் யாரைப் பற்றியும் நான் விமர்சிக்கவில்லை” என்று கூறினார்.
மேலும் அவர், “மதுவிலக்கை தவிர்த்து கோவன் சொன்ன மற்ற கருத்துகளை ஏற்க முடியாது. ராஜீவ்காந்தி கொலையையும், மன்மோகன்சிங் பற்றி விமர்சித்ததையும் ஏற்க முடியாது. டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதைத் தாண்டி கோவனின் எந்தக் கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. தமிழகத்தில் 7 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. பள்ளிகளை விட டாஸ்மாக் கடைகள் தான் அதிகம் உள்ளன. கல்வியில் முன்னிலையில் உள்ள தமிழகத்தில் டாஸ்மாக் வருமானத்தை வைத்து அரசு நடக்கிறது என்பது கொச்சைத்தனமான விஷயம். தொழில்துறையை மையப்படுத்தி பொருளாதாரம் இருக்க வேண்டும். டாஸ்மாக்கை வைத்து இருப்பது மோசமானது… என்றார்.


