சென்னை:
அம்பேத்கரின் 125 வது ஆண்டு, தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டு ஆகியவற்றை வெகுவிமரிசையாகக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் எம்.எல்.ராஜா வெளியிட்ட அறிக்கை:
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத செயற்குழு கூட்டம் ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் (தலைவர்) மற்றும் பொது செயலாளர் திரு.சுரேஷ் பையாஜி ஜோஷி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நாடெங்கிலும் இருந்து 400கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இரங்கல் தீர்மானம்:
நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து மறைந்த பலருக்கு இக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலம் சுவாமி தயானந்த சரஸ்வதி, மறைந்த நகைச்சுவை நடிகை மனோரமா, மற்றும் புல்லாங்குழ் இசைக் கலைஞர் டாக்டர் என்.ரமணி ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது 90 ஆண்டுகளைக் கடந்து 91 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களின் பேராதரவினைப் பெற்று தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயன் செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 10,500 ஷாகாக்கள் (தினசரிக் கூடுதல்கள்) அதிகரித்துள்ளன. நாட்டில் தற்போது நாடெங்கிலும் தற்போது 32,000 இடங்களில் மொத்தம் 50,400 ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் நடைபெற்று வருகிறது. மிலன் என அழைக்கப்படுகிற வாரக் கூடுதல்கள் 13,620 நடைபெற்று வருகின்றனர். 8000 சங்க மண்டலி என அழைக்கப்படுகிற மாதாந்திரக் கூடுதல்கள் நடைபெற்று வருகின்றன.
தினசரி சங்க ஷாகாவில் பங்கேர்ப்பவர்களில் 66% மாணவர்கள் ஆவார். சங்க தினசரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர்களில் 91% 40 வயதுக்கும் குறைவானவர்கள்.
ஆர்.எஸ்.எஸ்.சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 கிராமங்களில் கிராம வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேவை மற்றும் கிராம முன்னேற்றப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வேலைகள் நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றன.
நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ்.இல். இணைந்து வேலை செய்திட முன்வருவது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 4 வருடங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். வலைதளத்தின் வாயிலாக மாதந்தோறும் 1000 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்து வந்தனர். ஆனால் தற்போது அது 8000 ஆக உயர்ந்துள்ளது.
60 சதவிகித சங்க ஷாக்காக்கள் கிராமப் புறங்களிலும் 40 சதவிகித ஷாக்காக்கள் நகர்ப் புறங்களிலும் நடைபெற்று வருகின்றன. நாட்டிலுள்ள 90 சதவிகித தாலுக்காவில் சங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன.
நாடெங்கிலும் 53,000 க்கும் அதிகமான மண்டலகள் உள்ளன. (10 – 12 கிராமங்கள் அடங்கியது ஒரு மண்டல்) அதில் 50 சதவிகித மண்டல்களில் ஆர்.எஸ்.எஸ்.வேலை நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மண்டல் பகுதிகளுக்கும் சங்க வேலை சென்றடைந்திட திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
நீர் ஆதாரத்தைப் பெருக்குவது, நீர் நிலைகளைப் பாதுகாத்து பராமரிப்பது, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது நாட்டின் மிக முக்கியமான ஒரு பணியாகும். எனவே வரும் காலங்களில் இம்மாதிர் நீராதாரப் பணிகளில் அதிக கவனம் கொடுத்து வேலை செய்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு துவங்கியுள்ள “ஸ்வச்ச பாரத்” திட்டம் மகத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மக்களும் மிகுந்த பலனைத் தரும் அத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற சங்க ஸ்வயம்சேவகர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் கடந்த ஆண்டு நாகபுரி விஜயதசமி விழா உரையில் ‘கிராமங்கள் மற்றும் நகரங்களில் அனைத்து ஜாதியினருக்கும் ஒரு பொது மாயானம்தான் இருக்க வேண்டும். கோவில்களில் எவ்வித தடையுமின்றி அனைத்து ஜாதியினரும் அனுமதிக்கப்பட வேண்டும். ஊரில் உள்ள நீர்நிலைகளில் அனைத்து ஜாதியினரும் பயன்படுத்திட அனுமதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். சமுதாயத்தில் சமத்துவம் நிலவிட பல்வேறு முயற்சிகளை ஆர்.எஸ்.எஸ். செய்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூன்றாவது தலைவராக இருந்த பாலாசஹெப் தேவரஸ் அவர்களின் நூற்றாண்டு, பாபா சாஹேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களின் 125 பிறந்த ஆண்டு, காஷ்மீரில் பிறந்த பல்கலை வித்தகர் அபிநவ குப்தாவின், 1000வது ஆண்டு விழா மற்றும் ஏகாத்மத மாணவ தர்ஷன் கோட்பாட்டினை வழங்கிய தீனதயால் உபாத்யாய அவர்களின் 100 வது ஆண்டு விழாக்களை நாடெங்கிலும் கொண்டாடிட ஆர்.எஸ்.எஸ். செயற்குழு முடிவெடுத்துள்ளது. அடுத்த வருடம் சமுதாய சமத்துவத்தை பக்தி மார்க்கத்தின் வாயிலாக மக்களிடையே பரப்பிய ஸ்ரீராமானுஜரின் 1000வது ஆண்டினை வெகு விமர்சையாகக் கொண்டாடிட அதற்காக திட்டமிடவும் இச்செயற்குழு தீர்மானித்துள்ளது.


