கோவை மாவட்டம் போத்தனூர் லாயிடஸ் அவென்யூவை சேர்ந்தவர் நீஜாமுதீன் (வயது 60). தமிழக காவல்துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவர் தனது வீட்டை பூட்டி குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு திரும்பினார். வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறைக்கு சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 24 பவுன் தங்க நகைகள், ரூ. 35 ஆயிரம் பணம், விலை உயர்ந்த கை கடிகாரம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் முதல் தளத்தில் உள்ள கதவை உடைத்து உள்ளே வந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அவர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர். அப்போது 4 கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். போலீஸ் உயர் அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


