கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய நிவாரண அரிசி பையில் புழு இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை முடுக்கி விடுவதற்காக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் குழு கடலூர் வந்து, மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கடலூர், கெடிலம் ஆற்று நீர் உள்ளே புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த புருஷோத்தமன் நகர் பகுதி மக்கள் அங்குள்ள கே.என்.சி கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதலில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் அமைச்சர் குழுவின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி பைகளை நிவாரணமாக வழங்கினார்.
அதை வாங்கிய பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து, அந்த அரிசி பையை திறந்து பார்த்தபோது, அரிசிக்குள் ஏராளமான புழுக்கள் இருந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இது எங்களுக்கு எதுக்கு? நீங்களே எடுத்துகிட்டு போங்கள் என்று அதிமுக கட்சிக்காரர்களிடம் அரிசி பைகளை திருப்பி கொடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் கட்சிக்காரர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


