சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
நேற்று அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது.
இதேபோல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலை கொண்டுள்ளது.
இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்த வரை விட்டு விட்டு மழை பெய்யும். அவ்வப்போது தொடர் மழையும் பெய்யும்.
காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. இதன் காரணமாக இன்னும் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் பெய்து வரும் மழையினால் எல்லா பகுதிகளிலும் வெள்ளம் ஓடுகிறது.
இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் சென்னையையே புரட்டி போட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. என வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் ரமணன் செய்தியாளர்களிடம் கூறினார்.


