தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நேற்று (10-11-2015) காலை நடக்க இருந்த சைல்டு லைன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஊடகங்களையெல்லாம் அழைத்த மக்கள் தொடர்பு அதிகாரி, செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சித் தலைவரையே அழைக்காமல் வேடிக்கை காட்டியிருக்கிறார்.
தேசிய அளவில் 24 மணி நேரமும் குழந்தைகளுக்காக இயங்கிவரும் சைல்டு லைன்-(1098) சேவையை தருமபுரி மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்டுள்ள கூட்டங்களைப் பற்றியும், திட்டங்களின் செயல்பாடுகளைப் பற்றியுமான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று காலை 10.40க்கு நடக்க இருப்பதாக ஊடகங்களுக்கு தகவல் அனுப்பியிருந்தார் தருமபுரி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோ.
செய்தியாளர்களர்களும் குறித்த நேரத்திற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துவிட்டார்கள். ஆனால், மதியம் 12 மணி வரைக்கும் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்திற்க்கான எந்த அறிகுறியும் இல்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் விவேகானந்தனோ வேறு வேலைகளில் பரபரப்பாக இருந்தார். ஒன்றும் புரியாத செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சென்று, செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் ? என்று கேட்க, என்ன செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம்? என்று முழித்திருக்கிறார் மாவட்ட ஆட்சித் தலைவர். ”சைல்டு லைன் சந்திப்பு கூட்டம் என்றுமக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோவரச்சொன்னார்” என்று செய்தியாளர்கள் விளக்கிச் சொல்லவும். ”அப்படியா..? என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே. சைல்டு லைன் பற்றிய தகவல்கள் என்னிடம் இப்போதைக்கு இல்லை. வெள்ளப்பெருக்குதான் இப்போது பரபரப்பாக இருக்கிறது. அதைப்பற்றி வேண்டுமானால் பேசலாம்” என்று பேசி அனுப்பியிருக்கிறார்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தியே சொதப்பும் அளவுக்கா ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி இருப்பார் என்று மக்கள் தகவல் தொடர்புத்துறை வட்டாரத்தில் விசாரித்தால், மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோ மீது பல புகார்களை அடுக்குகிறார்கள் “இது ஒன்றும் தெரியாமல் நடந்த தவறு கிடையாது. மாவட்ட ஆட்சித் தலைவரை அழைக்காமல் விட்டுவிட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை முன்னிலைப்படுத்தி பேட்டி கொடுக்க வைப்பதுதான் அவருடைய நோக்கம். அதன் மூலம் மற்ற துறைகளில் உள்ள அதிகாரிகளையும் சரிகட்டிக்கொள்ள பார்க்கிறார். இதை எங்களால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சொல்லமுடியவில்லை. எதாவது எதிர்த்துப் பேசினால் நான் அமைச்சர் பழனியப்பனின் ஆள் என்று மிரட்டுகிறார். ஆட்சித் தலைவருக்குத் தெரியாமல் பல வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
இது தொடர்பாக மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோவிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது எனக்கு ரெண்டு நாளா காய்ச்சல், உடம்பு வேற சரியில்லை. நான்கு நாளைக்கு முன்னாடியே ஆட்சித் தலைவருக்கு தகவல் சொல்லிட்டோம். ஆட்சித் தலைவருக்கும் பி.சி.க்குமான கம்யூனிகேஷன் கேப்ல இப்படி ஆகிபோச்சு. மத்தபடி ஒன்னும் இல்ல. எப்போதாவது இப்படி நடக்குறது சகஜம்தானே” என்கிறார்.
இது தொடர்பாக விளக்கம்பெற மக்கள் தொடர்பு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட செய்தியாளர் தருமபுரி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டார். ஆனால், மாவட்ட ஆட்சியர் செய்தியாளரின் கைப்பேசி அழைப்பை ஏற்கவில்லை.
மக்கள் தகவல் தொடர்புதுறையில் இருந்துகொண்டு கம்யூனிகேஷன் கேப் என்று காரணம் சொல்லி இனி என்ன என்ன வேடிக்கை காட்ட போகிறாரோ மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோ…!


