தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மூடு டாஸ்மாக்கை மூடு பாடலைப் பாடிய பாடகர் கோவனை விடுதலை செய்ய வலியுறுத்தி புது தில்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு பொறுப்பாளரும், பாடகருமான கோவன் தேசத்துரோக வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு அண்மையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி அவர் பாடிய பிரசார பாடலில் பிரச்னைக்குரிய கருத்துக்கள் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் கோவனை விடுதலை செய்யக்கோரி நேற்று டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தெற்காசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் சுமார் 50 மாணவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் தமிழ்நாடு இல்லத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.ஆர்ப்பாட்ட மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்தின் உள்ளே நுழையாதபடி அவர்களை சற்று தூரத்தில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது தமிழக அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. நடைபெற்ற போராட்டத்தில் புது தில்லியில் படிக்கும் இலங்கையை சேர்ந்த சில மாணவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


