பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :–
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகிவிட்டார்கள் என்றும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், அதிக அளவு மழை பொழியும் போது சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும் என கூறியுள்ளாளர் .
கடலூர் மாவட்டத்தில் மழை நீரை ஆறுகளுக்கு கொண்டு செல்லும் கால்வாய்களில் 40 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் ஓடி ஆறுகளில் கலக்க வகை செய்யப்பட்டிருந்தாலே பெருமளவு சேதங்களைத் தடுத்திருக்கலாம்.
தமிழகத்தை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததன் விளைவு தான் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள்.
மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கவும், ரூ.1000 கோடி இழப்பு ஏற்படவும் காரணமான ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பது மட்டும் உண்மை என
மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


