தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களின் துயரில் பங்கேற்கின்ற விதமாக திமுக சார்பில் துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் தமிழக அரசிடம் வழங்கப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்
தெரிவித்துள்ளதாவது :-
தமிழகத்தில் கடந்த பத்து நாட்களாகதொடர்ந்து பெய்துவரும் பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அனைத்துப் பிரிவு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு, பலர் வீடிழந்து, வாழ்வாதாரம் உள்ளிட்ட உடைமைகளை இழந்து வருந்தி நிற்கின்ற நிலையில்அவர்களின் துயரில் பங்கேற்கின்ற விதமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் தமிழக அரசிடம் வழங்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தமிழக அரசின் சார்பில் துயர் துடைப்பு நிதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் 500 கோடி ரூபாய் என்பது ஏற்பட்டிருக்கும் இழப்பின் அளவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகவும் குறைவாகவே உள்ளதால், தமிழக அரசு மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெரும் அளவுக்கு நிதியினை தமிழக அர சு பெற வேண்டும் ,
மேலும் தமிழகத்தில் உள்ள வசதி படைத்தோரிடமிருந்து நிவாரண நிதி திரட்டிடவும் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை போதிய அளவுக்கு வழங்குவதற்கு மாவட்டந்தோறும் அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து, அந்தக் குழுவினர் முன்னிலையில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டுமென்றும் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.


