தமிழகத்தில் பலத்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்தாலும், வெள்ள நீர் மட்டும் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு ஆஜராகி,தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. சென்னையில் அனைத்து பகுதிகளும் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து இந்த உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, தகுந்த உத்தரவை தமிழக அரசுக்கு பிறப்பிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மழைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்தார்கள். மேலும் இது குறித்து அவர்கள் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது :-
கனமழை பெய்வது என்பது இயற்கையானது. பல பகுதிகளில் சாலைகளிலும், வீட்டுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்துள்ளது. மக்களும் கடுமையாக அவமதிப்படுகின்றனர். இந்த இயற்கை சீற்றத்துக்காக இந்த ஐகோர்ட்டை நாடுபவர்கள், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, சட்டவிரோதமாக கட்டிடங்கள் தொடர்பாக ஏன் இங்கு வருவதில்லை? நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இந்த இயற்கை சீற்றத்தின் வீரியத்தை உணர்ந்த பின்னர், இந்த ஐகோர்ட்டுக்கு வருவதை ஏற்கமுடியாது. மக்கள் ஓட்டு போட்டுத்தானே அரசாங்கத்தை தேர்வு செய்கின்றனர்? அதேநேரம், தேர்தலில் வாக்குறுதிகளை கொடுக்கும்போது, அதை நிறைவேற்றவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என்று நீதிபதிகள் அளித்த விளக்கத்தில் கூறியுள்ளனர்.


