அப்பாவை சந்தித்து பேசிவிட்டுத்தான் வருகிறேன். அவர் நலமாக இருக்கிறார். அதனால்தான் கிளம்புகிறோம்…
அப்பா நலமாக உள்ளதால் தான் வீட்டிற்கு கிளம்பிச் செல்கிறோம்…
– இப்படியெல்லாம் வெளியில் சொல்லிக் கொண்டாலும் மு.க.அழகிரிக்கு மூக்குக்கு மேல் கோபம் இல்லாமலில்லை! பின்னே… மு.கருணாநிதிக்கு மகன், முன்னாள் மத்திய அமைச்சர். திமுக.,வில் தனக்கும் செல்வாக்கு உண்டு… இப்படி எல்லாம் ஹை ப்ரொஃபைல் வைத்திருக்கும் மு.க.அழகிரிக்கு, தாம் ஓரங்கட்டப் பட்டு சிறகொடிந்த நிலையில் இருக்கிறோம் என்னும் எண்ணம் ஒவ்வொரு கணமும் ஏற்படும் போதும் மூக்குக்கு மேல் கோபம் வரத்தானே செய்யும். அதைவிட, தற்போது உடல் நலமின்றி திமுக., தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும்போது, அவர் உடல் நலம் குறித்து விசாரிக்க வரும் தலைவர்கள் எல்லாம் வரிசையாக மு.க.ஸ்டாலினிடம் சென்று மட்டுமே விசாரித்தால்…?!
குலாம் நபி ஆசாத், முகுல் வாசினிக் என காங்கிரஸ் தலைகள் எல்லாம் ஒன்று போல் வந்து, ஸ்டாலினை மட்டுமே கண்டு கொண்டு கை குலுக்கி, நலம் விசாரித்து விட்டுச்சென்று கொண்டிருந்தனர். திமுக.,வின் இரண்டாம் மட்டத் தலைகள் எல்லாம், ஸ்டாலின் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். வெளியில் தப்பித் தவறியும் தலை காட்டி, அழகிரி இருக்கும் அறைப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லையாம்.
அழகிரி அறைப் பக்கம் செல்வதையும் சிலர் தடுத்துவிடுகிறார்கள் என்று குறை கூறுகின்றார்கள். அந்த வேலையை கச்சிதமாக இருவரின் சகோதரி கனிமொழி செய்து வருகிறாராம்.
ஏற்கெனவே சென்ற வருடம் ஸ்டாலின் லண்டன் சென்றிருந்த போது, திடீரென சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க அவசர அவசரமாக சென்னை திரும்பினார் ஸ்டாலின். அப்போது தனது வீட்டுக்கு வந்த பிரதமரை தம்மால் வரவேற்க இயலாதவகையில் தகவல் தொடர்பற்று தாம் இருப்பதை சுட்டிக் காட்டி, அழகிரி ஒரு கடிதத்தை பிரதமர் மோடிக்கு எழுதியிருந்தார்.
பின்னர் மத்தியில் இருப்போர் குறிப்பாக அமித் ஷாவின் தூதுவர்களாக ராம் மாதவ் உள்ளிட்ட சில பாஜக., தகவல் தொடர்பாளர் தலைகள் அழகிரியுடன் தொடர்பில் இருந்தனர். தமிழகத்தில் பாஜக., வளர்ச்சிக்கு நிலையற்ற நிலையில் தவிக்கும் ரஜினியை நம்புவதை விட அதிரடி அரசியலில் தனியிடம் பெற்ற அழகிரியை இழுக்கலாம் என்ற அதிதீவிர எண்ணத்தால் அழகிரியிடம் பேசப்பட்டதாம். அதற்கு அழகிரியோ, மாட்டேன் என்றும் சொல்லாமல், வருகிறேன் என்றும் சொல்லாமல் சற்று பொறுங்கள் என்று இழுத்தாராம்.
இதை மனத்தில் கொண்டே, கடந்த மாதம் அழகிரி இன்னும் 3 அல்லது 6 மாதம் பொறுத்திருங்கள் என்று, அவரது அரசியல் நடவடிக்கை குறித்துக் கேட்ட செய்தியாளர்களிடம் பதில் கூறியுள்ளார்.
இதனிடையே கோபாலபுரத்தில் கடந்த இரு நாட்களாக வேறொரு செய்தியும் உலா வருகிறது. வீட்டிலேயே வைத்து அனைத்து வசதிகளுடன் கருணாநிதிக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் பேசியபோது, அழகிரி வந்தே அந்த முடிவை மாற்றி, உடனே காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினாராம். அதன்பிறகே கருணாநிதி காவேரிக்கு அழைத்துச் செல்லப் பட்டார் என்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் பல்வேறு யூகங்கள் உலா வருகின்றன. கோபாலபுரத்தில் தன்னைத் தடுக்கும் சக்திகள் சில உள்ளதாக அழகிரி கருதுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்னொரு நிகழ்வும் அழகிரியை மட்டுமல்ல, அழகிரி ஆதரவாளர்களையும் கோபத்திலும் வருத்ததிலும் உறைய வைத்திருக்கிறது.
இரு சகோதரர்களையும் தவிர்த்துவிட்டு, கனிமொழியை முன்னிலைப் படுத்தி பேசியுள்ளார் மதுரை ஆதீனம். துவக்க காலத்தில், தி.க.வின் விடுதலை இதழ், பின்னர் திமுக., என்று வளர்ந்து, பின்னாளில் சூழல் காரணமாக மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுக் கொண்ட அருணகிரிநாதர், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க நேற்று வந்திருந்தார். கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து அவரது நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து 15 நிமிடங்கள் உரையாடினேன். அப்போது கருணாநிதி உடல்நிலை ஓரளவு சரியாகி உள்ளது. இருப்பினும், அவரால் இயங்க முடியாத, பேச முடியாத நிலை இருப்பதால், யாரையும் அனுமதிக்கவில்லை. சன்னிதானம் மன்னித்துக் கொள்ள வேண்டும்’ என்றனர்.
கருணாநிதி 70 ஆண்டு காலமாக தமிழ் சமுதாய பணியாற்றி உள்ளார். தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்து, உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் நலனுக்காக பாடுபட்டவர். அவரது வழியில் ஸ்டாலின், தி.மு.க.,வையும், இந்த சமுதாயத்தையும் நல்ல முறையில் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. கனிமொழியும் தன் பணிகளை சமுதாய, மொழிப் பணிகளை, தந்தை வழியில் நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. தி.மு.க.,வை ஸ்டாலினும், கனிமொழியும், துரைமுருகன் போன்ற மூத்த அனுபவமிக்க அரசியல் தலைவர்களும் உறுதுணையாக இருந்து வழி நடத்துவர்… என்று கூறிவிட்டுச் சென்றார்.
மதுரை ஆதீனத்தின் இந்தப் பேச்சு அழகிரி ஆதரவாளர்களை சீண்டிப் பார்த்துள்ளது. வரட்டும்… மதுரைதானே…! என்று கருவிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே திமுக., அழகிரிக்கே என்று ஒரு தரப்பு டிவிட்டர் பக்கங்களில் ஹேஷ் டேக் போட்டு டிவிட்டர் ட்ரெண்ட் எல்லாம் செய்து பார்த்தனர். இதனால் திமுக.,வை பிளவுபடுத்தி அழகிரி தலைமையில் ஒரு பிரிவை கணக்கு செய்து தங்கள் பக்கம் இழுக்க அமித் ஷா முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்று திமுக.,வுக்குள்ளேயே கிசுகிசுக்கள் உலாவரத் தொடங்கியுள்ளன.



