வெளுத்துப்போன “மூளைச் சலவை!” உதவிக்கரம் கொடுத்த மத மற்றும் தொண்டு அமைப்புகள்
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடுரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.
இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகளின் தன்னலம் கருதாத மீட்புப் பணிகள் ஏராளமான முஸ்லிமல்லாத சகோதரர்களின் கண்களையும் மனங்களையும் திறக்க வைத்துள்ளன.
“இப்படிப்பட்ட முஸ்லிம்களையா அர்ஜுனும் விஜயகாந்தும் தங்கள் திரைப்படங்களில் தீவிரவாதிகளாய் காட்டினார்கள்?” என்றெல்லாம் அந்த சகோதரர்கள் மனம் நெகிழ்ந்து பதிவிடும்போது, திரைப்படங்களும் ஊடகங்களும் அப்பாவி மக்களை எப்படி மூளைச் சலவை செய்து வைத்துள்ளன என்பது தெரிகிறது. அவர்களின் “மூளைச் சலவையை” வெளுக்கச் செய்து விட்டது இந்தப் பெருமழை.
இதில் இன்னொரு முக்கிய செய்தியும் உண்டு. சில அறிவுஜீவிகளும் முற்போக்குவாதிகளும் யாரை “வஹ்ஹாபிகள்… வஹ்ஹாபிகள்” என்று நாளும் பொழுதும்முகநூலில் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்களோ அவர்கள்தாம் மீட்புப் பணியில் முன்வரிசையில் நின்றார்கள்..!
இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை முஸ்லிம்கள் ஆற்றும் மனிதநேய மீட்புப் பணிகள்..! இன்று பார்த்தசாரதி கோயிலில் முஸ்லீம்கள் உணவு தயாரிக்க, அதை கிறிஸ்துவர்கள் அனைவருக்கும் விநியோகிக்கும் காட்சியை பார்த்தபோது “இதுதான் எம் மக்கள். இன்னும் எத்தனை இடர் வந்தாலும் சமாளிப்போம்” என்ற தெம்பு வந்தது.
மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அணைத்து நலதிட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதாக மக்களால் பரவலாக பேசப்படுகிறது. மிக கொடுரமாக மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் மீதும் கூட முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி குமுறி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசியல் போன்று எவ்விதமான இலவச சுய விளம்பரமும் தேடி கொள்ள ஆசைப்படாமல் இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மனித நேயத்துடன் உதவிக்கரம் கொடுத்த அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.!
இனியாவது மக்களின் வரிப்பணத்தில் இலவச சுய விளம்பரம் தேடிகொ(ல்)ள்ளும் அரசியல்வாதிகள் திருந்தினால் சரி.! திருந்துவார்களா என்ன .?
– மாலதி ராணி –


