தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழகக் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டனர்.
இதை அடுத்து பெயர் குறிப்பிடாமல் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கூட்டுச் சதி, அரசு அதிகாரி சட்டத்தை மீறிக் காயம் ஏற்படுத்துதல், தவறான ஆவணங்களை வைத்து தாக்குதலுக்கு காரணமாக இருத்தல், வழிப்பறி, உடைமைகளைச் சூறையாடுதல், கொலைவெறித் தாக்குதல், அதிகம் பேர் ஒன்று சேர்ந்து தாக்குதலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.