மும்பையில் மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி கலந்துரையாடிய போது மாணவர்களுக்கு நலன் தரும் தகவலை பற்றி பேசாமல் அரசியல் பற்றியே பேசியதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்னர்.
மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய போது ராகுல் பேசியதாவது :-
ஜிஎஸ்டி மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கவலைகளை மோடி அரசு கண்டுகொள்வது இல்லை. அனைவரும் அமர்ந்து பேசுவதன் மூலம் ஜிஎஸ்டி தொடர்பான பொதுவான கருத்தை எட்ட முடியும். ஆனால் மோடியின் மத்திய அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை.
ஜிஎஸ்டி தொடர்பான காங்கிரஸின் நிபந்தனைகளை மோடி அரசு ஏற்கும் நாளில் நாடாளுமன்றத்தில் 15 நிமிடங்களில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறிவிடும். ஜிஎஸ்டி-யில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டுமென்றுதான் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
ஜிஎஸ்டி-யைத் தடுத்தவர்கள் யார்?: காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றவிடாமல் 7 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது பாஜகதான். முன்பு ஜிஎஸ்டியைத் தடுப்பதில் முன்னிலையில் இருந்தவர் அருண் ஜேட்லி. குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது ஜிஎஸ்டியை தீவிரமாக எதிர்த்து வந்தார்.
எனவே, இப்போது ஜேட்லி போன்றவர்கள் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறினால் நாட்டுக்கு நல்லது என்று காங்கிரஸ் கட்சிக்கு கூறத் தேவையில்லை. ஜிஎஸ்டி சிறப்பானது என்பது எங்களுக்குத் தெரியும். இப்போதும் அது குறைபாட்டுடன் நிறைவேறக் கூடாது என்பதைத்தான் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.முக்கியமாக ஜிஎஸ்டி வரி அதிகபட்சமாக இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.
குறுகிய மனப்பான்மை: “ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அதே நேரத்தில் சகிப்பின்மையுடன் நடந்து கொள்கிறது. பிறகு எப்படி வெற்றி பெற முடியும்? நாங்கள் எண்ணுவதுபோலத்தான் இந்தியாவும் இருக்க வேண்டும்; முடிந்தால் உலகமும் அப்படியே இருக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறுகிய மனப்பான்மை கொண்ட கொள்கை. நீங்கள் பெண்கள்; உங்களுக்கான இடம் சமையலறை என்று நான் கூறினால், அது உங்களை கட்டிப்போடும் செயல்தானே?
இவர்கள் ஹிந்துக்கள்; இவர்கள் முஸ்லிம்கள்; இவர்கள் பெண்கள் என முத்திரை குத்துவது பாஜகவின் கொள்கை. ஆனால் அனைவரும் நம் மக்கள் என்பது காங்கிரஸின் கொள்கை என்று மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய போது ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி கலந்துரையாடிய போது மாணவர்களுக்கு நலன் தரும் தகவலை பற்றி பேசாமல் அரசியல் பற்றியே பேசியதாக மாணவர்கள் குற்றம்
சாட்டியுள்னர்.


