மும்பையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திடீர் என்று நடைபயணம் மேற்கொண்டார்.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மும்பை வந்தார். அங்கு நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.
மும்பையில் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள ஹாலுக்கு மறைந்த முன்னாள் நகர தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோரா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார்.இன்று ராகுல்காந்தி மும்பையில் உள்ள நிர்வாகவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளிடையே உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில் மாணவர்கள் தங்களுக்கு எந்தவித எல்லையும் வகுத்து கொள்ளக் கூடாது,
மாணவர்களின் நடவடிக்கைகளால் நாட்டிற்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் ராகுல்காந்தி மும்பையில் பந்த்ராவில் பிரசார நடைபயணம் தொடங்கினார். தாராவி வரை 6 கி.மீ. தூரத்துக்கு அவர் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் நடை பயணம் சென்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.


