கடலூர் மாவட்டம் அருகே நேற்று மரத்தின் கார் மோதி ஏற்ப்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள நடுவீரப்பட்டு வான்ராசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் வெங்கட்ராமன் மேட்டூரில் உள்ள தனியார் தொழிநுட்ப்ப கல்லூரியில் படித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகை மற்றும் சி.என்.பாளையத்தில் நடைபெறும் மலைப் பிள்ளையார் கோயில் விழாவில் பங்கேற்பதற்காக, வெங்கட்ராமன் சொந்த ஊருக்கு வந்தார்.
அவருடன், கல்லூரியில் பயிலும் நண்பர்களான ஈரோட்டைச் சேர்ந்த முனியன் மகன் தினகரன் (20), திருச்செங்கோட்டைச் சேர்ந்த முருகன் மகன் மோகன் (20), சென்னையைச் சேர்ந்த லோகேஸ்வரன் (21), திருவள்ளூர் மாவட்டம், ராமபுரத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் திவாகர், மேட்டூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கார்த்திக் (21), கெளரிசங்கர் ஆகியோரும் வந்திருந்தனர்.
வெங்கட்ராமன் தனது காரில் கல்லூரி நண்பர்கள் மற்றும் சி.என்.பாளையம் புத்திரன்குப்பத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் சசிக்குமார் (20), சொக்கநாதன்பேட்டை சம்மந்தம் மகன் முத்து (20) ஆகியோருடன் சனிக்கிழமை காலை புறப்பட்டார். கடலூர் மற்றும் சில இடங்களுக்குச் சென்றவர்கள் மதியம் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பாலூரை அடுத்துள்ள குச்சிப்பாளையம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.
இதில் காரிலிருந்த வெங்கட்ராமன், தினகரன், மோகன், லோகேஸ்வரன், கெளரிசங்கர், திவாகர், சசிக்குமார், முத்து ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லேசான காயத்துடன் கார்த்திக் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமார், மற்றும் காவல் துறையினர் போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கார் உருக்குலைந்ததால் சடலங்கள் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. காரை உடைத்து சடலங்களை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



