காஞ்சிபுரம்:
செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியில் திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்ஸவம் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
திருமுக்கூடலில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுகின்றன. இந்தக் கூடுதுறையில், ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயில். இங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பார்வேட்டை உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பழையசீவரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள், சாலவாக்கம் சீனிவாச பெருமாள், காவான்தண்டலம் லட்சுமி நாராயண ஸ்வாமி, திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் என ஐந்து பெருமாள்களும் பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் தரிசனம் அளித்தனர்.
இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ் விழாவின்போது பக்தர்கள் கோயிலுக்கு செல்லவும், திரும்ப வெளியே வரவும் ஏதுவாக இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இவ் விழாவையொட்டி முன்னதாக வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் இருந்து வரதராஜ பெருமாள் பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் கோயிலை வந்தடைந்தார். அங்கு வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மருடன் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து திருமுக்கூடல் சென்று பார்வேட்டை உற்ஸவத்தில் பங்கேற்றார்.
இவ் விழா முடிந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டு அவளூர், ஏரிவாய், படப்பம், தேனம்பாக்கம், அம்மன்காரத் தெரு வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் கோயிலை சென்றடைந்தார்.