ஹைதராபாத்:
ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட தலித் மாணவர் ரோகித் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஹைதராபாத் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் மீது மாணவரை தற்கொலைக்குத் தூண்டியதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரோஹித் வெமுலாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் குண்டூர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரோஹித், பல்கலைக்கழக மானியக் குழுவின் இளநிலை ஆய்வு அறிஞர்களுக்கான (JRF) உதவித்தொகையை பெற்றுவந்தார். இந்தப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் வட்டத்தில் ரோகித் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் சக மாணவர்களுடன் சேர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு எதிராக போராடினார்.
இந்தப் போராட்டத்தின் போது, பா.ஜ.க., சார்பிலான மாணவர் அமைப்பு ஏபிவிபி.,யுடன் மாணவர்களுக்கு இடையிலான மோதல் வெடித்தது. மேலும் மாணவர்கள் தாக்கியதாக ஏபிவிபி.,யைச் சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் அந்த மாணவர்கள் மீது முதற்கட்ட விசாரணையை தொடங்க அனுமதியளித்தது.
மத்திய அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட ரோகித் உள்ளிட்ட 5 மாணவர்களை கடந்த டிசம்பர் 21ம் தேதி விடுதி, உணவகம், நூலகம் என்று மாணவர்கள் பயன்படுத்தும் பொதுவெளிகள் எதையும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று பல்கலைக் கழகம் உத்தரவிட்டது.
நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக பல்கலைகழக வளாகத்திற்கு வெளியே கூடாரம் அமைத்து போராடி வந்தனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் சமூக புறக்கணிப்பாலும், தொடர் நெருக்கடிகளாலும் மனமுடைந்த ரோகித், தலித் பேராசிரியர்கள்கூட தங்களுக்கு ஆதரவாக இல்லையே என்று தன் நண்பர்களிடம் தனது ஆதங்கத்தை கூறியுள்ளார். தொடர்ந்து சில மணி நேரத்தில் விடுதி அறைக்குள் நுழைந்த அவர் தூக்கு மாட்டிக் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ரோகித்தின் உடலை வைத்துக் கொண்டு, மாணவர்கள் நேற்றிரவு முழுவதும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் பல்கலைக்கழகத்திற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களைக் கைது செய்து ரோகித்தின் உடலைக் கைப்பற்றினர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், பலியான வெர்முலா ரோகித்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஹைதராபாத் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரோஹித் தற்கொலையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.அவர் எழுதிய 5 பக்க தற்கொலைக் குறிப்பு இப்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



