சென்னை:
சென்னையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தை அடுத்த காரப்பாக்கத்தில் தலப்பாகட்டி பிரியாணி ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த ஓட்டல் நிர்வாகம் அழைத்ததின் பேரில், குமார், சரவணன், வேல்முருகன் உள்பட 3 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதில் முதலில் குமார் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால் அவரது தம்பி சரவணனும் அடுத்து வேல்முருகனும் உள்ளே இறங்கினர். 3 பேரும் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால், ஓட்டல் ஊழியர்கள் கழிவு நீர் தொட்டியின் அருகில் நின்று சத்தமிட்டனர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனால், ஓட்டல் ஊழியர் ராஜேஷ் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினார். சிறிது நேரம் ஆனதும், அவரும் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில், அடையாறு துணை ஆணையர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். கழிவு நீர்த் தொட்டிக்குள் சிக்கிக் கொண்ட குமார், சரவணன், வேல்முருகன், ராஜேஷ் ஆகியோரை மீட்கும் பணியில் போலீசாரும் அங்கிருந்தவர்களும் ஈடுபட் டனர். அப்போது, 4 பேரும் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரின் உடலையும் மீட்ட போலீசார், அவர்களின் உடல்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.